திருக்குறள் - 336     அதிகாரம்: 
| Adhikaram: nilaiyaamai

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

குறள் 336 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nerunhal ulanoruvan indrillai ennum" Thirukkural 336 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் நெருதல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து; - ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம். '(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை - ஒருவன் நேற்றிருந்தான், இன்றில்லை; என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு - என்று சொல்லும் பெருமையை உடையது இவ்வுலகம்! உண்மை உடம்போடிருத்தலையும் இன்மை இறத்தலையும் குறிக்கும், இரட்டுறலால் உண்மை பிறத்தலையுங் குறிக்குமேனும், குழவிப் பருவத்திறப்பு மிகச் சிறுபான்மையாதலானும், குழவியை அஃறினைச் சொல்லாலன்றி ' ஒருவன் ' என்று உயர்திணைச் சொல்லாற் குறிப்பது மரபன்மையானும், வீற்றிருந் தாளன்னை வீதி தனிலிருந்தாள் நேற்றிருந்தா ளின்றுவெந்து நீறானாள் என்று பட்டினத்தடிகள் பாடியது போல், "நேற்றிருந்தான், இன்றில்லை" என்று இளைஞரையும் முதியோரையும் பற்றிக் கூறுவதே வழக்கமாதலாலும், அவ்வுரை சிறப்புள்ளதன்றாம். ' ஒருவன்' என்னும் ஆண்பால் தலைமை பற்றிப் பெண்பால் ஒன்றன்பாலையுந் தழுவும். ' பெருமை' என்றது எதிர்ப்பொருளணி (Irony) யாதலால், ' நிலையாமை மிகுதி' என்று கொள்ளத் தேவையில்லை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் நேற்றைய தினம் இருந்தான். இன்றைய தினம் இல்லாமற் போனான் என்று கூறப்படும் நிலையாமை மிகுதியினை உடையதாகும் இவ்வுலகு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நீண்ட நாட்கள் இருந்த ஒருவர் இன்று இல்லை என்ற பெருமை படைத்தது இந்த உலகம்.

Thirukkural in English - English Couplet:


Existing yesterday, today to nothing hurled!-
Such greatness owns this transitory world.

ThirukKural English Meaning - Couplet -Translation:


This world possesses the greatness that one who yesterday was is not today.

ThiruKural Transliteration:


nerunhal uLanoruvan indrillai ennum
perumai udaiththuiv vulagu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore