திருக்குறள் - 1203     அதிகாரம்: 
| Adhikaram: ninaindhavarpulampal

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

குறள் 1203 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ninaippavar poandru ninaiyaarkol thummal" Thirukkural 1203 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் நம்மை நினைப்பவர்போன்று நினையார் கொல்லோ: தும்மல் தோன்றுவதுபோன்று கெடாநின்றது. தலைமகள் உலகத்துப் பெண்டிராயுள்ளார் கூறுவதொன்றை ஈண்டுக் கூறினாள்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால் காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாராகல் வேண்டும். (சினைத்தல்: அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத் துமமல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினை முடிவதுபோன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) தும்மல் சினைப்பது போன்று கெடும்-எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றி அடங்கி விடுகின்றது; நினைப்பவர் போன்று நினையார் கொல் - ஆதலால், காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாது விட்டுவிடுகின்றார் போலும்! வேற்றிடத்திலுள்ள அன்புகெழுமிய உறவினரால் நினைக்கப்பட்டவர்க்குத் தும்மலெழு மென்பது, பொதுவான உலகியற் கொள்கை. கணவன் மனைவியரினுஞ் சிறந்த வுறவின்மையால் , வினை பற்றிப் பிரிந்து வேற்று நாடுசென்ற கணவன் தன் மனைவியை நினைப்பது இயல்பே. ஆயின், இடைவிடாது வினை கெடுமாதலின், வினை முடிந்த பின்னரே மனைவியை நினைத்து மீளுவதாகக் கூறுவது புலனெறி வழக்கம். அதற்கேற்ப, தலைமகள் தனக்குத் தும்மல் தோன்றி யடங்கியதினின்று, தலைமகன் மேற்கொண்ட வினை முடிவது போன்று தோன்றி முடியாமையை யுணர்ந்தாளாகக் கொள்ளப்பெறும். சினைத்தல் - அரும்புதல். 'கொல்' ஐயம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நினைப்பவர் போன்று நினைக்காமல் என்னைக் கொல்வது தும்மல் சினைப்பது போன்று கெடும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தும்மல் எழுவது போலத் தோன்றி எழாமல் அடங்குகின்றதே! அதனால், நம் காதலர் நினைப்பவர் போலிருந்தவர் நம்மை மறந்து நினையாமற் போயினாரோ!

Thirukkural in English - English Couplet:


A fit of sneezing threatened, but it passed away;
He seemed to think of me, but do his fancies stray?

ThirukKural English Meaning - Couplet -Translation:


I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.

ThiruKural Transliteration:


ninaippavar poandru ninaiyaarkol thummal
sinaippadhu poandru kedum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore