திருக்குறள் - 1308     அதிகாரம்: 
| Adhikaram: pulavi

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

குறள் 1308 - திருவள்ளுவர் - ThiruValluvar

"noadhal evanmatru nondhaarendru aqdhariyum" Thirukkural 1308 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யான் நோகின்றதனால் பயனென்னை? இவர் நொந்தாரென்று நினைத்து அதனை யறிந்து தீர்க்கும் காதலர் மனமிலாராகியவிடத்து. இஃது உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் புலந்துழி. அதனையறிந்து அகம்புக்க தோழி அவனுக்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளொடு புலந்து சொல்லியது.) நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி - இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினை அறியும் அன்புடையாரைப் பெறாவழி; நோதல் மற்று எவன் - ஒருவர் நோகின்றதனாற் பயன் என்? ('அறிதல்' - ஈண்டு ஊடலை இனிது உணர்தல். 'மற்று' - வினை மாற்றின்கண் வந்தது. இவள் நம் காதலியல்லள்; அன்மையின், இந்நோவு அறியாள்; அறியாமையின், நாம் புலக்கின்றதனால் பயனில்லை எனத் தன் ஆற்றாமை உணர்த்தியவாறு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் நொந்து சொல்லியது.) நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லா வழி - இவர் நம் செயல் பற்றி நொந்தாரென்று அந்நோவினையறியும் அன்புடையார் இல்லாதவிடத்து ; நோதல் எவன் - ஒருவர் நொந்து என்ன பயன் ? இவள் நம் காதலியல்லள் .ஆகலால் நம் நோவறியாள் . ஆகவே, நாம் நோவதாற் பயனில்லை யெனத் தன் ஆற்றாமையுணர்த்தியவாறு. அறிதல்-அறிந்து ஊடல் தீர்தல் மற்று-அசைநிலை .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வருத்தம் யாரால் உண்டானது என்று வருந்திட அறியா காதலரை மாற்றிட இல்லை வழி.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘நம்மாலே இவரும் நோயுற்றார்’ என்று உணர்ந்து, அதைத் தீர்க்க முயலும் காதலர் இல்லாத போது, வீணாக வருத்தம் அடைவதனால் என்ன பயன்?

Thirukkural in English - English Couplet:


What good can grieving do, when none who love
Are there to know the grief thy soul endures?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?.

ThiruKural Transliteration:


noadhal evanmatru nondhaarendru aqdhariyum
kaadhalar illaa vazhi.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore