திருக்குறள் - 683     அதிகாரம்: 
| Adhikaram: thoodhu

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

குறள் 683 - திருவள்ளுவர் - ThiruValluvar

"noolaarul noolvallan aakudhal vaelaarul" Thirukkural 683 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல். ('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வேலாருள் வென்றிவினையுரைப்பான் பண்பு-வேற்படையுடைய வேற்றரசரிடஞ் சென்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்வானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்-அரசியல் நூலை அறிந்தவருள் தான் அந்நூலறிவிற் சிறந்தவனாயிருத்தலாம். கொல்லுந் திறத்தினர் என்பது தோன்ற 'வேலார்' என்றும், இருவகைத்தூது வினையும் அடங்க 'வென்றிவினை' என்றும், கூறினார். 'வல்லனாகுதல்' அந்நூற் செய்தியெல்லாவற்றையும் தெளிவாக அறிந்திருத்தலும், தவறாகச் சொன்னவிடத்து அதைத் திருத்துதலுமாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


வேலினையுடைய வேற்றரசனிடம் சென்று தம் அரசனுக்கு வெற்றியைத் தரும் தொழில் சொல்வானுக்கு இலக்கணமாவது, நீதி நூல்களைக் கற்ற அமைச்சருக்குள் தான் அவற்றில் வல்லவனாதல்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நூல் படைப்பவர்களில் வல்லமையான நூல் படைக்க அவைகளை கற்று அறிய வேண்டும். அதுபோலவே, வேல் பாய்ச்சுபவர்களை கடந்து வெற்றிக்கான செயல்களை உரைப்பது பண்பு.

Thirukkural in English - English Couplet:


Mighty in lore amongst the learned must he be,
Midst jav'lin-bearing kings who speaks the words of victory.

ThirukKural English Meaning - Couplet -Translation:


To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).

ThiruKural Transliteration:


noolaaruL noolvallan aakudhal vaelaaruL
vendri vinaiyuraippaan paNpu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore