திருக்குறள் - 33     அதிகாரம்: 
| Adhikaram: aran valiyuruththal

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

குறள் 33 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ollum vakaiyaan aravinai" Thirukkural 33 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க. இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும். செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க. (இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறவினை - அறமாகிய நல்வினையை; ஒல்லும் வகையான் - தத்தமக் கியன்றவாறு; செல்லும்வாய் எல்லாம் ஒவாதே செயல் - அது நடை பெறக் கூடிய வழியெல்லாம் இடைவிடாது செய்க. ஒல்லும் வகையாவது, இல்லற வினையை இடம்பொருளேவற்கு ஏற்பவும், துறவறவினையை உடம்புநிலைக்கும் உளநிலைக்கும் ஏற்பவும், செய்தல். செல்லும் வாய்கள் மனம் மொழி மெய் என்னும் முக்கரணங்கள். அவற்றாற் செய்யப் பெறுவன நல்லெண்ணம் நன் சொல் நற்செயல் என்பன. வாய் என்பது வழியை மட்டுமன்று இனத்தையுங் குறித்தலால், 'செல்லும் வாய்' என்பன எல்லா அறத் துறைகளுமாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மால் முடியக்கூடிய வழிகளால் இடைவிடாமல் செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் அறத்தினைச் செய்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஏற்கும் வகையில் இருப்பதே அறச் செயல், ஏற்க முடியாதது எப்படியாவது எல்லாவற்றையும் செய்வது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நம்மாலே முடிந்த வகைகளில் எல்லாம், முடியக்கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயல்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.

Thirukkural in English - English Couplet:


To finish virtue's work with ceaseless effort strive,
What way thou may'st, where'er thou see'st the work may thrive.

ThirukKural English Meaning - Couplet -Translation:


As much as possible, in every way, incessantly practise virtue.

ThiruKural Transliteration:


ollum Vakaiyaan aRavinai Ovaadhe
sellumvaai ellaaGn cheyal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore