திருக்குறள் - 932     அதிகாரம்: 
| Adhikaram: soodhu

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

குறள் 932 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ondreydhi noorizhakkum soodharkkum untaangol" Thirukkural 932 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முன்பு ஒருபொருளைப் பெற்று அவ்வாசையாலே மற்றொரு பொருளினைப் பெறலாமென்று நூறு பொருளை யிழக்கின்ற சூதாடிகளுக்கு நன்றெய்தி வாழ்வதொரு நெறி உண்டாமோ?.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் - அத்தூண்டிற் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல் - பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ? ஆகாது. (அவ்வாற்றால் பொருளிழந்தே வருதலான் அதனால் எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும்-தூண்டில் முள்ளைப் பொதிந்த இரையைப் பெற்றுப் பின்பு உயிரையிழக்கும் மீன் போல, முதலாட்டத்தில் வென்று ஒரு தொகையைப் பெற்றுப் பின்பு இன்னும் பெறுவோம் என்னும் ஆசையால் மேலும் மேலும் ஆடி, முன்பு பெற்றதுபோல் நூறு மடங்கு இழந்து வறியராகி வாழ்நாள் குன்றியிறக்கும் சூதாடிகட்கும்; நன்று எய்தி வாழ்வது ஒர் ஆறு உண்டாம் கொல்-அறமும் இன்பமும் பெற்று நன்றாக வாழ்வதொரு வழியும் உண்டாகுமோ? உண்டாகாது. பொருளைச் சூதாட்டிலேயே தொடர்ந்து செலவழிப்பதாலும் வரவரப் பொருள் குன்றி வருவதாலும், நன்றெய்தி வாழும் வழியில்லையென்றார். 'ஒன்று', 'நூறு' என்பன பொருள் குறியாது அளவு குறித்தன. 'நூறு' என்பது இங்குப் பேரெண்ணைக் குறித்தது. உம்மை இழிவு சிறப்பு. 'கொல், வினா.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு முறை வென்று நூறு முறை தோற்கும் சூதாடிகளுக்கு உண்டாகுமா? நன்மைகள் பெற்று சிறப்புடன் வாழும் வழி.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பெறுவோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்காக இழந்து வறியவராகும் சூதருக்கும், பொருளால் நன்மைகளை அடைந்து வாழ்கின்ற நெறியும் ஒன்று உளதாகுமோ?

Thirukkural in English - English Couplet:


Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way
That they may good obtain, and see a prosperous day?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ?

ThiruKural Transliteration:


Ondreydhi Noorizhakkum Soodharkkum Untaangol
Nandreydhi Vaazhvadhor Aaru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore