திருக்குறள் - 1310     அதிகாரம்: 
| Adhikaram: pulavi

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

குறள் 1310 - திருவள்ளுவர் - ThiruValluvar

"oodal unanga viduvaaroadu en nenjam" Thirukkural 1310 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) ஊடல் உணங்க - தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும்; விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை. (அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக்கூட்டம் முடியாது' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.) ஊடல் உணங்க விடுவாரோடு - ஊடல்கொண்ட போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவரோடு; என் நெஞ்சம் கூடுவேம் என்பது - என் உள்ளம் கூடியின்புறுவேம் என்று, கருதுகிறதற்குக் கரணியம்; அவா - அதன் ஆசையேயன்றி வேறன்று. இதற்குப் பரிமேலழகருரை வருமாறு - (உணர்ப்புவயின் வாராவூடற்கட்டலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது.) ஊடல் உணங்க - தானூடற்கண்ணே மெலியா நிற்கவும்; விடுவாரோடு கூடுவேம் என்பது என்னெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேமென்று என்னெஞ்சம் முயறற்கேது தன்னவாவே பிறிதில்லை. என்பதற்கேது என இருக்கவேண்டியது. 'என்பது' எனக் கருமகம் (காரியம்) கரணமாக (காரணமாக) ச்சார்த்திக் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடலை மாற்றி கூட முயலாதவருடன் என்நெஞ்சம் கூடிடுவோம் என்பது அதன் அளவற்ற ஆசையே.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஊடல் கொண்ட போது தெளிவித்து இன்பம் செய்யாமல் வாடவிடுகின்றவரோடு, எம் நெஞ்சம் ‘கூடுவோம்’ என்று நினைப்பது, அதுகொண்டுள்ள ஆசையினாலே ஆகும்.

Thirukkural in English - English Couplet:


Of her who leaves me thus in variance languishing,
To think within my heart with love is fond desire.

ThirukKural English Meaning - Couplet -Translation:


It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.

ThiruKural Transliteration:


oodal unanga viduvaaroadu en-nenjam
kooduvaem enpadhu avaa.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore