திருக்குறள் - 1109     அதிகாரம்: 
| Adhikaram: punarchchimakizhdhal

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

குறள் 1109 - திருவள்ளுவர் - ThiruValluvar

"oodal unardhal punardhal ivaikaamam" Thirukkural 1109 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடுதலும் ஊடல் தீர்தலும், பின்னைப் புணர்தலுமென்னுமிவை அன்பினாற் கூடினார் பெற்ற பயன். காமம் - அன்பு. புணர்தலெனினும் பேணுதலெனினும் ஒக்கும். ஊடற் குறிப்பு தோன்றநின்ற தலைமகளை ஊடல் தீர்த்துப் புணர்ந்த தலைமகன் அதனால் வந்த மகிழ்ச்சி கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(கரத்தல் வேண்டாமையின், இடையறிவு இல்லாத கூட்டமே இன்பப் பயனுடைத்து என வரைவு கடாவியாட்குச் சொல்லியது.) ஊடல் உணர்தல் புணர்தல் இவை - புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ்வதாய அப்புணர்ச்சிதானும் என இவை அன்றே; காமம் கூடியார் பெற்ற பயன் - வரைந்து கொண்டு காமத்தை இடைவிடாது எய்தியவர் பெற்ற பயன்கள்? ('ஆடவர்க்குப் பிரிவு என்பது ஒன்று உளதாதல் மேலும், அதுதான் பரத்தையர் மாட்டாதலும், அதனையறிந்து மகளிர் ஊடி நிற்றலும், அவவூடலைத் தவறு செய்தவர் தாமே தம் தவறின்மை கூறி நீக்கலும், பின்னும் அவ்விருவரும் ஒத்த அன்பினரய்க் கூடலுமன்றே முன்வரைந்தெய்தினார் பெற்ற பயன். அப்பயன் இருதலைப் புள்ளின் ஓருயிராய் உழுவலன்புடைய எமக்கு வேண்டா', என அவ்வரைந் தெய்தலை இகழ்ந்து கூறியவாறு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


[ மறைத்தல் வேண்டாமையின் அச்சமின்றியும் நாள்தோறுங் கூடுங் கூட்டமே இன்பஞ் சிறக்குமென வரைவுகடாவியவட்குச் சொல்வியது.] ஊடல் ஊணர்தல் புணர்தல் இவை- பழகப் பழகப் பாலும் புளித்தல்போல் நாளடைவில் இன்பங் குன்றிய புணர்ச்சியினிதாதற் பொருட்டு வேண்டியதான ஊடலும் , அது முதிர்ந்து உள்ளதையுங் கெடுக்காவாறு அளவறிந்து நீக்கலும் , அதன்பின் கூடலும் ஆகிய இவையன்றோ , காமம் கூடியார் பெற்ற பயன் - வரைந்து கொண்டு காமவின்பஞ் சிறந்தவர் பெற்ற பயன்கள். ஆடவர் தத்தம் தொழில்பற்றிப் பிரிந்துபோதலும் , அவர் வரவு குறித்த காலங் கடந்த விடத்துப் பெண்டிர் வருந்துதலும் , வந்தபின்பும் ஏதேனுமொன்று கருதிக்கொண்டு ஊடுதலும் , அதைக் கணவர் பல்வேறு வகையில் நீக்குதலும் , அதன்பின் கணவன் மனைவியர் கூடுதலும் ஆகிய இவைதாமே , வரைந்து கொண்ட கற்பொழுக்கத்தார் பெற்ற பயன் ! வரையாமையால் அருமைப் படுவதும் , மறைவால் இன்பஞ் சிறப்பதும் , இக்களவொழுக்கப் பேரின் பத்திற்கு அக்கற்பொழுக்க வூடவின்பம் எவ்வகையிலும் ஈடாகுமோ ? . அதை நான் வேண்டேன் என்று அதை இகழ்ந்தவாறு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறிய பிணக்கு, தேவை உணர்தல், புணர்ந்து மகிழ்தல் இவைகள் காமத்துடன் கூடி இணைந்தவர் பெற்ற பயன்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஊடலும், அதனை அளவோடு அறிந்து தெளிவித்தலும், பின்னர்க் கூடுதலும், என்னும் இவை எல்லாம், காமம் பொருந்தியவர் தமக்குள் பெற்ற பயன்களாகும்.

Thirukkural in English - English Couplet:


The jealous variance, the healing of the strife, reunion gained:
These are the fruits from wedded love obtained.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.

ThiruKural Transliteration:


oodal uNardhal puNardhal ivaikaamam
kootiyaar petra payan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore