திருக்குறள் - 1304     அதிகாரம்: 
| Adhikaram: pulavi

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

குறள் 1304 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ooti yavarai unaraamai vaatiya" Thirukkural 1304 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நும்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை: நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும். இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப் போமேன்ற தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும். ('நீர் பரத்தையரிடத்தில் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்', என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) ஊடியவரை உணராமை-நும்மொ டூடிய பரத்தை யரை ஊடல் தீர்த்துக் கூடாது விடுதல் ; வாடிய வள்ளி முதல் அரிந்த அற்று - முன்பே நீர் பெறாது வாடிய கொடியை அடியில் அறுத்துவிட்டாற் போலும் . நீர் பரத்தையரோ டிருக்குங்கால் எம் புதல்வரைக் கொண்டாற்றியிருக்கத் தக்கேமாகிய யாம் , நும்மோ டூடுதற் குரியே மல்லேம் . ஆதலால் எம்மை யுணர்த்தல் வேண்டேம் . எம்மினும் நுமக்குரியாரா யூடிய பரத்தையரையே யுணர்த்துதல் வேண்டும் . ஆதலால் அங்கேயே சென்மின் என்பதாம் .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறுபிணக்கு கொண்டவரை உணராமல் இருப்பது வாடிய கொடியை வேருடன் அறுப்பது போன்றது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாமல் கைவிடுதல், முன்பே நீரில்லாது வாடிப் போன வள்ளிக் கொடியின் வேரை அறுப்பது போன்றது ஆகும்.

Thirukkural in English - English Couplet:


To use no kind conciliating art when lover grieves,
Is cutting out the root of tender winding plant that droops.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.

ThiruKural Transliteration:


ooti yavarai unaraamai vaatiya
valli mudhalarin thatru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore