திருக்குறள் - 398     அதிகாரம்: 
| Adhikaram: kalvi

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

குறள் 398 - திருவள்ளுவர் - ThiruValluvar

"orumaikkan thaan katra kalvi oruvarku" Thirukkural 398 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து. கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து. (வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.) சி இலக்குவனார் உரை: நன்கு கருத்தைச் செலுத்தி உள ஒருமைப்பாட்டோடு கற்ற கல்வி ஒருவர்க்கு மிகுதியும் வலிமை ஆதலை உடையது.

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவற்கு - ஒருவனுக்கு ; தான் ஒருமைக்கண்கற்ற கல்வி -தான் ஒரு பிறப்பிற் கற்ற கல்வி; எழுமையும் ஏமாப்பு உடைத்து -எழுபிறப்பளவுந் தொடர்ந்து அரணாகநின்று உதவுந் தன்மையயுடையது. கல்வியறிவு வினைகள் போல உயிரைப் பற்றித் தொடர்தலின், 'எழுமையும் ஏமாப்புடைத்து ' என்றார் . 'எழுமை ' என்றது தொடர்ந்த எழுமக்கட்பிறப்பை. அல்லாக்கால் அவ்வறிவு பயன்படாமை அறிக. ஏமாப்பு பாதுகாப்பு. உதவுதல் நல்வழியிற்செலுத்தி நலமாக வாழ்வித்தல். ஏழென்பது இங்குக் காலநீட்சி பற்றிய நிறைவெண்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுக்குத் தன பிறப்பிலே கற்ற கல்வியானது எழுகின்ற பல பிறப்புக்களிலும் பாதுகாப்பாக உதவுதலை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தனிமையிலும் தான் கற்ற கல்வி ஒருவாருக்கு உயர்ச்சியிலும் சிறந்ததாக மாறும்

Thirukkural in English - English Couplet:


The man who store of learning gains,
In one, through seven worlds, bliss attains.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.

ThiruKural Transliteration:


orumaikkaN thaan-katra kalvi oruvaRku
ezhumaiyum Emaap pudaiththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore