திருக்குறள் - 126     அதிகாரம்: 
| Adhikaram: atakkamutaimai

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

குறள் 126 - திருவள்ளுவர் - ThiruValluvar

"orumaiyul aamaipoal aindhatakkal aatrin" Thirukkural 126 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. (ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல்' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆமைபோல் - ஆமையானது, தனக்குத் தீங்கு நேராவாறு, தன் ஓருடம்பிற்குள் தன் தலையும் நாற்காலுமாகிய ஐந்துறுப்புக்களையும் அடக்கிக் கொள்ளுதல் போல; ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - இல்லறத்தானும் ஒரு பிறப்பில் தன் ஐம்பொறிகளையும் தீவினை நேராதவாறு அடக்க வல்லனாயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ்வல்லமை அவனுக்கு எழு பிறப்பளவும் அரணாதலை யுடையது. ஒருமை, ஐந்து, எழுமை என்பன தொகைக் குறிப்பு. இவற்றுள் ஒருமை எழுமை என்பன எண்ணாயிருக்கும் நிலைமை குறியாது எண்ணையே குறித்து நின்றன. எழுபிறப்புஎன்பதற்கு 62 ஆம் குறளுரையில் தந்த விளக்கத்தையே இங்குங் கொள்க.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு பிறப்பில் ஆமையினைப் போல மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அடக்கி வாழும் வல்லமை பெற்றிந்தால் அவ்வல்லமை எழுகின்ற பிறவிகளில் எல்லாம் பாதுகாப்பு உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒன்றில் மட்டும் ஆமைப் போல் ஐந்து புலன்களையும் அடக்க செய்தால் எழுந்து செயல்படும் பொழுதெல்லாம் காவலாக இருக்கும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஆமையைப் போல, ஐம்பொறிகளையும் இந்த ஒரு பிறப்பிலே அடக்கிக் கொள்ளுதலில் வல்லவனானால், அதனால் எழுமையும் பாதுகாப்பு உண்டு.

Thirukkural in English - English Couplet:


Like tortoise, who the five restrains
In one, through seven world bliss obtains.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.

ThiruKural Transliteration:


orumaiyuL aamaipoal aindhatakkal aatrin
ezhumaiyum Emaap pudaiththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore