திருக்குறள் - 1269     அதிகாரம்: 
| Adhikaram: avarvayinvidhumpal

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

குறள் 1269 - திருவள்ளுவர் - ThiruValluvar

"orunaal ezhunaalpoal sellumsaen sendraar" Thirukkural 1269 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் போலச் செல்கின்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு - சேணிடைச் சென்ற தம் காதலர் மீண்டுவரக் குறித்தநாளை உட்கொண்டு, அது வரும் துணையும் உயிர்தாங்கி வருந்தும் மகளிர்க்கு; ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் - ஒரு நாள் பல நாள் போல நெடியதாகக் காட்டும். ('ஏழ்' என்பது அதற்குமேலாய மிக்க பன்மை குறித்து நின்றது; 'ஒருவர் கூறை எழுவர் உடுத்து' என்றாற்போல. தலைமகள் வருத்தம் பிறர்மேலிட்டுக் கூறியவாறு. இதனான் இதுவும் தலைமகள் கூற்றாகாமையறிக. 'இரு நாள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்கு பவர்க்கு- நெடுந்தொலைவு சென்ற தம் காதலர் திரும்பி வருவதாகக் குறித்த நாளை மனத்துட்கொண்டு, அது வருமளவும் ஏக்கம் பிடித்து வருந்தும் மகளிர்க்கு; ஒருநாள் எழு நாள் போல் செல்லும்- ஒரு நாளே பலநாள் போல் நெடிதாகத் தோன்றும். ஏழு என்னும் நிறைவெண் இங்குக் கழிபன்மை யுணர்த்தி நின்றது. முன்பு தலைமகள் பட்டறிவையறிந்த தலைமகன் அதைப் பொதுப்படுத்திக் கூறியவாறு. இருநாளென்று பாடமோதுவாரும் இருந்தமை பரிமேலழக ருரையால் தெரியவருகின்றது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு நாள் எழு நாட்கள் போல் செல்லும் தூரம் சென்றவர் வருகின்ற நாளை கணக்கு வைத்து ஏங்குபவர்க்கு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தொலைவிடத்துக்குப் போய் பிரிந்து சென்ற காதலர் வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்கும் மகளிருக்கு, ஒரு நாள் தானும் ஏழுநாள் போல் நெடியதாகக் கழியும்.

Thirukkural in English - English Couplet:


One day will seem like seven to those who watch and yearn
For that glad day when wanderers from afar return.

ThirukKural English Meaning - Couplet -Translation:


To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.

ThiruKural Transliteration:


orunaal ezhunaalpoal sellumsaen sendraar
varunaal-vaiththu aengu pavarkku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore