திருக்குறள் - 156     அதிகாரம்: 
| Adhikaram: poraiyutaimai

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

குறள் 156 - திருவள்ளுவர் - ThiruValluvar

"oruththaarkku orunhaalai inbam poruththaark" Thirukkural 156 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம். இது புகழுண்டா மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம். [ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது].

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளை யின்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் -ஆனால், அத்தீங்கைப் பொறுத்தார்க்கோ உலகம் அழியும்வரையும் புகழுண்டாம். 'ஒருநாளை யின்பம்' சரிக்குச் சரி செய்தேம் என்னும் பொந்திகை (திருப்தி). புகழ் உலகமுள்ள காலமெல்லாம் தொடருமாதலால் , பொன்றுதல் இங்கு உலகத்தின் தொழில்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


குற்றம் செய்தவர்களைத் தண்டித்தவர்களுக்கு ஏற்படுவது அந்த ஒரு நாளைய இன்பமேயாகும். பொறுத்துக்க கொண்டவர்களுக்கு உலகம் அழியும் வரையிலும் பெருமையும் புகழும் உண்டு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொறுக்காதவருக்கு ஒரு நாள் கிடைக்கும் இன்பம் பொறுத்தவருக்கு துணையாகவும் போற்றும் புகழாகவும் இருக்கும்.

Thirukkural in English - English Couplet:


Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.

ThiruKural Transliteration:


oRuththaarkku orunhaaLai inbam poRuththaarkkup
pondrunh thuNaiyum pukazh.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore