திருக்குறள் - 589     அதிகாரம்: 
| Adhikaram: otraatal

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.

குறள் 589 - திருவள்ளுவர் - ThiruValluvar

"otrer runaraamai aalka udanmoovar" Thirukkural 589 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒற்றரை விடுங்கால் ஒருவரையொருவர் அறியாமல் விடுக: மூவர் சொல் உடன்கூடின் அது தெளியப்படுமாதலால். இவை இரண்டும் ஒற்றரை யாளுந்திறங் கூறின.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒற்று ஒற்று உணராமை ஆள்க - ஒற்றாரையாளும் இடத்து ஒருவனையொருவன் அறியாமல் ஆள்க; உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும் - அங்ஙனம் ஆண்ட ஒற்றர் மூவரை ஒரு பொருள்மேல் வேறுவேறு விட்டால் அம்மூவர் சொல்லும் பயனால் ஒத்தனவாயின், அது மெய் என்று தெளியப்படும். ('ஆயின்' என்பது வருவிக்கப்பட்டது. ஒருவனையொருவன் அறியின் தம்முள் இயைந்து ஒப்பக்கூறுவர் ஆகலின், 'உணராமை ஆள்க' என்றும், மூவர்க்கும் நெஞ்சு ஒற்றுமைப் படுதலும், பட்டால் நீடு நிற்றலும் கூடாமையின் 'தேறப்படும்' என்றும் கூறினார். இதனானே அஃது ஒத்திலவாயின் பின்னும் ஆராய்க என்பதூஉம்பெற்றாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒற்று ஒற்று உணராமை ஆள்க- ஒற்றரையாளுமிடத்து ஒருவனை யொருவன் உய்த்துணர்வாலும் அறியாதவாறு தனித்தனி ஆள்க; உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும்- அங்கனம் ஆளப்பெற்ற ஒற்றர் மூவர் கூற்று ஒத்துவரின் அதையே உண்மை யென்று தெளிதல் வேண்டும். அரசன் ஒற்றரை ஒருவனை யொருவன் அறியாவாறு ஆண்டாலும் , பகைவர் நாட்டில் இறந்தாரையும் மறைந்தவை கேட்கவும் வல்லவரான ஒற்றர் தம் நாட்டு ஒற்றரை அரசனுக்குத் தெரியாமலே அறிந்து கொள்ளக் கூடுமாதலானும் , அவருட்சிலர் தம்முள் இசைந்து ஒப்பக்கூறலாமாதலானும் ,எல்லாரையும் அரசன் நம்பாமலிருக்கவும் முடியாதாதலானும், மூவர் சொல் ஒத்துவந்தவழி நம்புக என்று வெளிப்படையாகவும்,அங்ஙனம் வராவிடின் மேற் கொண்டும் பிறர் வாயிலாக ஆராய்ந்து உண்மை காண்க வென்று குறிப்பாகவும், கூறினார் .'படும் ' என்னும் துணைவினை 'செய்யப்படும்' (குறள்.335) என்பதிற்போல் வேண்டும் என்னும் பொருளதாம்.இதனால் ஒற்றர் கூற்றுகளை ஆராயும் வகை கூறப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒற்றர்களை ஆளும்பொழுது ஒருவரை ஒருவர் அறியாதபடி ஆளுதல் வேண்டும். அவ்வாறுள்ள ஒற்றர்கள், மூவரை வேறு வேறாக ஒரு பொருளினை அரியச் செலுத்தி, அம்மூவர் தருவதும் ஓத்திருந்ததால் அது மே என்று தெரியப்படும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்காணித்து தந்த தகவல்களை சரியாக உணரவேண்டும் என்றால் மேலும் மூன்று நபர்களின் தகவலுடன் ஒப்பிட்டு அறிந்துக் கொள்ளவேண்டும்.

Thirukkural in English - English Couplet:


One spy must not another see: contrive it so;
And things by three confirmed as truth you know.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.

ThiruKural Transliteration:


otreR RuNaraamai aaLka udanmoovar
sotrokka thaeRap padum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore