திருக்குறள் - 127     அதிகாரம்: 
| Adhikaram: eekai

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

குறள் 127 - திருவள்ளுவர் - ThiruValluvar

"paaththoon maree i yavanaip pasiyennum" Thirukkural 127 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பகுத்து உண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை. இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பாத்து ஊண் மரீஇயவனை - எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது - பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை. (இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பாத்து ஊண் மரீஇ யவனை-எப்போதும் பலரொடும் பகிர்ந்துண்டு பயின்றவனை; பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது-பசியென்று சொல்லப்படும் கொடிய நோய் தாக்குதலில்லை. நாள்தோறும் வந்து வருத்துவதாலும், நல்லார் வல்லாருட்பட எல்லாரையுந் தாக்குவதாலும், எம்மருந்தாலும் அறவே நீக்கப்படாமையாலும், பிற நோய்கள் அழிக்காதவற்றையும் அழித்து மறுமையிலுந் துன்புற வழிகோலுவதாலும், பசி தீப்பிணி யெனப் பட்டது . "இறைக்க வூறும் மணற் கேணி; ஈயப் பெருகும் பெருஞ் செல்வம் ." ஆதலின், பாத்துண்டு பயின்றவனைப் பசிப்பிணி தீண்டுவதில்லை. தீண்டுவதுமில்லை யெனவே வருத்தாமையைச் சொல்ல வேண்டுவதில்லை. 'மரீஇ' (மருவி) இன்னிசையளபெடை. அரிது என்பது இங்கு இன்மைப் பொருளது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


எப்போதும் பகுத்துப் பிறர்க்குக் கொடுத்து உண்ணப் பழகிய ஒருவனை, பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டுதல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பார்த்து உன்ன மறுப்பவனை ( பகிர்ந்து உன்ன நினைப்பவனை) பசி என்ற தீய நோய் தீண்டுவது கடினம்.

Thirukkural in English - English Couplet:


Whose soul delights with hungry men to share his meal,
The hand of hunger's sickness sore shall never feel.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.

ThiruKural Transliteration:


paaththooN maree-i yavanaip pasiyennum
theeppiNi theeNdal aridhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore