திருக்குறள் - 372     அதிகாரம்: 
| Adhikaram: oozh

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

குறள் 372 - திருவள்ளுவர் - ThiruValluvar

"paedhaip patukkum izhavoozh arivakatrum" Thirukkural 372 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும். இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இழவு ஊழ்(உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும், ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும். (கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்,' 'ஆகல் ஊழ்'என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை'என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும்வேறுபடுக்கும் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இழவு ஊழ் (உற்றக்கடை) பேதைப்படுக்கும் -ஒருவன் தன்செல்வத்தை இழத்தற்குக்கரணகமான தீயூழ் வந்துற்ற விடத்து, அது அவன் எத்துணைப்பேரறிஞனாயிருந்தாலும் அவனைப் பேதையாக்கும்; ஆகல்ஊழ் உற்றக்கடை அறிவு அகற்றும்-இதற்கு மாறாக, அவனுக்குச் செல்வஞ் சேர்வதற்கேற்ற நல்லூழ் வந்துற்ற விடத்து, அது அவன் எத்துணைப் பேதையாயிருந்தாலும் அவனைப் பேரறிஞனாக்கும். செல்வம் என்பது அதிகாரத்தால் வந்தது. 'இழவூழ்', 'ஆகலூழ்' என்பன 4-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. உற்றக்கடை என்பது இறுதிநிலை விளக்கணி. மேற்கூறிய முயற்சிக்கும் சோம்பற்கும் ஏதுவான நிலைமைகள் இங்குக் கூறப்பட்டன.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுக்கு எல்லா அறிவும் இருந்தாலும், கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழ் வந்தபோது, அது அந்த அறிவினைப் போதையாக்கும். இனி, அவன் அறிவு சுருங்கி இருந்தாலும் கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ் வந்தபோது அது அவ்வறிவினை விரிக்கும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


முட்டாளாக மற்றும் இழிவான உழ்வினை அறிவை அகற்றிவிடும், ஆக்கம் தரும் உழ்வினையோ அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும்.

Thirukkural in English - English Couplet:


The fate that loss ordains makes wise men's wisdom foolishness;
The fate that gain bestows with ampler powers will wisdom bless.

ThirukKural English Meaning - Couplet -Translation:


An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

ThiruKural Transliteration:


paedhaip patukkum izhavoozh aRivakatrum
aakaloozh utrak kadai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore