திருக்குறள் - 709     அதிகாரம்: 
| Adhikaram: kuripparidhal

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.

குறள் 709 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pakaimaiyum kaenmaiyum kannuraikkum kannin" Thirukkural 709 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனோடுள்ள பகைமையையும் நட்பையும் கண்கள் சொல்லும்; கண்ணினது வேறுபாட்டையறிவாரைப் பெறின். இது கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க்கல்லது பிறர்க்கரிதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் - வேந்தர் தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்- அவர்க்கு மனத்துக் கிடந்த பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும். (இறுதிக்கண் 'கண்' ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன: வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல்: அவற்றை அவ்வக்குறிகளான் அறிதல்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்- அரசரின் பார்வை வேறுபாடுகளை அறியவல்ல அமைச்சரைப் பெற்றால்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்-அவ்வரசர்க்குப் பிறரோடுள்ள பகைமையையும் நட்பையும் அவர் கண்களே தெரிவிக்கும். பார்வை வேறுபாடுகள் எண்சுவையோடு சமந்தமும்(சாந்தமும்)சேர்ந்த தொண்சுவை(நவரசம்) பற்றியன; பகைமை பற்றிய சின நோக்கு கண் சிவப்பாலும், நட்புப்பற்றிய மகிழ்நோக்கு கட் பொலிவாலும், அறியப்படும். 'கண்' இரண்டுட் பின்னது ஆகுபெயர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பகையையும் நட்பையும் கண்கள் வெளிப்படுத்தும், கண்களின் தன்மையை உணரும் ஆற்றல் பெற்றால்.

Thirukkural in English - English Couplet:


The eye speaks out the hate or friendly soul of man;
To those who know the eye's swift varying moods to scan.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship.

ThiruKural Transliteration:


pakaimaiyum kaeNmaiyum kaNNuraikkum kaNNin
vakaimai uNarvaarp peRin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore