திருக்குறள் - 191     அதிகாரம்: 
| Adhikaram: payanila sollaamai

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

குறள் 191 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pallaar muniyap payanila solluvaan" Thirukkural 191 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது, தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பம் ஆகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை. பொய்,குறளை,கடுஞ்சொல்,பயனில் சொல் என வாக்கின்கண் நிகழும் பாவம் நான்கனுள், பொய் துறந்தார்க்கு அல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின், அஃது ஒழித்து இல்வாழ்வாரால் கடியப்படும் ஏனை மூன்றனுள் , கடுஞ்சொல் இனியவை கூறலானும் , குறளை புறங்கூறாமையானும் விலக்கி, நின்ற பயனில் சொல் இதனான் விலக்குகின்றார் ஆகலின், இது புறங்கூறாமையின் பின் வைக்கப்பட்டது.) பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் வெறுக்குமாறு வீண் சொற்களைச் சொல்பவன்; எல்லாரும் எள்ளப்படும் - எல்லாராலும் இழிவாய் எண்ணப்படுவான். எல்லாரும் என்று பிற்குறித்ததனால் பல்லார் என்று முற்குறித்தது அறிவுடையாரை யென்பது உய்த்துணரப்படும். அறிவுடையார் வெறுக்கவே அவரைப் பின்பற்றி ஏனையோரும் வெறுப்பர் என்பது கருத்து. எள்ளுதல் மனத்தின் செயல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவுடையார் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைப் பேசுகின்ற ஒருவன் எல்லா மக்களாலும் இகழப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பல மனிதர்கள் முன்னிலையில் பயனற்றதை பேசுபவரை அனைத்து மனிதர்களும் ஏளனம் செய்வார்கள்.

Thirukkural in English - English Couplet:


Words without sense, while chafe the wise,
Who babbles, him will all despise.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He who to the disgust of many speaks useless things will be despised by all.

ThiruKural Transliteration:


pallaar muniyap payanila solluvaan
ellaarum eLLap padum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore