திருக்குறள் - 1223     அதிகாரம்: 
| Adhikaram: pozhudhukantirangal

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

குறள் 1223 - திருவள்ளுவர் - ThiruValluvar

"paniarumpip paidhalkol maalai thuniarumpith" Thirukkural 1223 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது. இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிக வாராநின்றது. (குளிர்ச்சி தோன்ற மயங்கிவருமாலை என்னுஞ் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல் கொள் மாலை-காதலரோடு கூடியிருந்த நாளெல்லாம் குளிர்ச்சி தோன்றிப் பசந்து வந்த மாலை, துனி அரும்பித் துன்பம் வளர வரும்-இந்நாளில் எனக்கு உயிர் வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றிப் துன்பம் மேன்மேலும் வளருமாறு வருகின்றது. 'பனியரும்பிப் பைதல் கொள்' என்னுந் தொடர், நடுக்கங் கொண்டு துன்பப்பட என்றொரு குறிப்புப் பொருளுந் தோன்ற நின்றது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பனி போல் மெல்ல அரும்பி வேகமாய் வரும் மாலை சிறு துளி அரும்பித் துன்பம் வளர வரும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பனி தோன்றிப் பசந்துவந்த மாலைக் காலமானது, எனக்கு வருத்தம் தோன்றி மென்மேலும் வளரும்படியாகவே இப்போது வருகின்றது போலும்!

Thirukkural in English - English Couplet:


With buds of chilly dew wan evening's shade enclose;
My anguish buds space and all my sorrow grows.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.

ThiruKural Transliteration:


paniarumpip paidhalkol maalai thuniarumpith
thunpam valara varum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore