திருக்குறள் - 1197     அதிகாரம்: 
| Adhikaram: thanippatarmikudhi

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

குறள் 1197 - திருவள்ளுவர் - ThiruValluvar

"paruvaralum paidhalum kaanaankol kaaman" Thirukkural 1197 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


(காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ? காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான்கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ. ('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை'? என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


காமன் ஒருவர்கண் நின்று ஒழுகுவான்-காமத்தேவன் காமவின்பம் நுகர்தற்குரிய இருபாலாரிடத்தும் ஒப்பநில்லாது, பெண்பாலாரிடத்து மட்டும் நின்று காதலை யுண்டுபண்ணுவான்; பருவரலும் பைதலும் காணான் கொல்-அவர் பசலையுற்றும் படர்மிகுந்தும் துன்புறுதலையும் மனம் நோதலையும் கண்டறியானோ? எல்லாரிடத்தும் ஒப்பநின்று ஒழுகவேண்டியவன் நடுநிலை திறம்பியும், காம வினைக்குத் தலைமை பூண்டவன் காம நுகர்ச்சிக்குரிய இருவரிடத்து மன்றி ஒருவரிடத்து மட்டும் காதலையுண்டுபண்ணிக் கடமை தவறியும் வினையறியாதும், ஆடவரை விட்டுவிட்டு மெல்லியலாரையே இரக்கமின்றி வருத்தியும், கொடுமை செய்து திரிபவனும் ஒரு தெய்வமோ? மாந்தரும் தெய்வமும் ஒரு சேரக் கைவிட்டபின் நான் உய்யுமாறென்னை யென்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பருவம் பூப்பதையும் தேவை ஏற்படுவதையும் அறியமுடியாத காமத்திற்கான தேவன் ஒருவர் மீது மட்டும் நின்று செயல்படுகிறான்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


இருவரிடத்திலும் ஒத்து நடக்காமல் ஒருவரிடம் மட்டும் காமன் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன் காண மாட்டானோ?

Thirukkural in English - English Couplet:


While Kaman rushes straight at me alone,
Is all my pain and wasting grief unknown?

ThirukKural English Meaning - Couplet -Translation:


Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?

ThiruKural Transliteration:


paruvaralum paidhalum kaanaankol kaaman
oruvar-kan nindrozhuku vaan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore