திருக்குறள் - 1190     அதிகாரம்: 
| Adhikaram: pasapparuparuvaral

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

குறள் 1190 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pasappenap paerperudhal nandre nayappiththaar" Thirukkural 1190 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று: நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின். இது நின்மேனி பசந்ததென்ற தோழிக்கு அவ்வளவாய்க் குற்றமில்லையென்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்; பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே - பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று. ('நட்டார்' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள், அவரை அருளிலர் என்னாது 'இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகளை யாற்றுவித்தற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவிடத்து அவள் இயற்பட மொழிந்தது.) (இ-ரை.) நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்-பிரிவிற்கு உடம்படச்செய்த காதலர் இன்றுவந்து கூடாமையை நட்டோர் பழியாராயின்;பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே-பசலையடைந்தாள் என்று வேற்றுமைப்படச் சொல்லப்படாது, பசலையேயானாள் என்று ஒற்றுமைப்படச்சொல்லப்பெறுதலும் நல்லதேயாம். பசலையடைதல் மேனிமட்டும் பசப்பு நிறம்பெறுதல். பசலையாதல் உடம்புமுழுவதும் பசப்பாக மாறுதல். நட்டோர் என்பது அவாய்நிலையால் வந்தது;இகழ்ச்சிக் குறிப்பு. எகாரம் தேற்றம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பசலை படர்ந்தவள் என்று பெயர் பெறுதல் நன்றே நயமாக பேசி பிரிந்தவர் வாக்கு மாறியவன் என தூற்றார் என்றால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘பிரிவுக்கு உடன்படச் செய்து பிரிந்து போனவர், நமக்கு அருள் செய்யாதது பற்றித் தூற்றார்’ என்றால், யான் பசந்தேன் என்று பேர்பெறுவதும் நல்லதேயாகும்!

Thirukkural in English - English Couplet:


'Tis well, though men deride me for my sickly hue of pain;
If they from calling him unkind, who won my love, refrain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then).

ThiruKural Transliteration:


pasappenap paerperudhal nandre nayappiththaar
nalkaamai thootraar enin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore