திருக்குறள் - 521     அதிகாரம்: 
| Adhikaram: sutrandhazhaal

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

குறள் 521 - திருவள்ளுவர் - ThiruValluvar

"patratra kannum pazhaimaipaa raattudhal" Thirukkural 521 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடாதொழுகுதல் சுற்றத்தார்மாட்டே யுளவாம். இஃது இல்லாக் காலத்தினும் விடாரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள், சுற்றத்தார்கண்ணே உள - சுற்றத்தார்மாட்டே உள ஆவன. (சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின்,ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் அல்லது அதிகாரம் தொலைந்து வறியனானதின் விளைவாகத் தொடர்பு நீங்கிய விடத்தும் , அவனொடு தமக்கிருந்த பழையவுறவைச் சொல்லிப்பாராட்டும் இயல்புகள் ; சுற்றத்தார் கண்ணே உள - உறவினரிடத்திலேயே உள்ளன. 'பழைமை' பழைய இன உறவாட்டு ; ஆகுபெயர். நண்பரும் வறியாரும் நன்மை பெற்றிருப்பராதலின் ; இங்குப் பழைமையென்றது பழைய இனவுறவுநிகழ்ச்சிகளையே , உம்மை இறந்தது தழுவிய எச்சம்; சிறப்பன்று. ஏகாரம் பிரிநிலை; தேற்றமன்று. பற்றறாத போதுமட்டுமன்றிப் பற்றற்ற போதும் என்றும் , சுற்றத்தாரிடத்திலேயே என்றும் , பொருள்படுவதை நோக்கி யுணர்க.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் செல்வமிழந்து வறியவனான காலத்திலும் அவனுடைய பழைமையை எடுத்துக் கொண்டாடுகின்ற இயல்புகள் சுற்றத்தாரிடம் இருப்பனவாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உரிமைக் கொண்டாட ஒன்றும் இல்லாத பொழுதும் உறவுப் பாராட்டுவது சுற்றத்தாரிடத்தில் உண்டு.

Thirukkural in English - English Couplet:


When wealth is fled, old kindness still to show,
Is kindly grace that only kinsmen know.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).

ThiruKural Transliteration:


patratra kaNNum pazhaimaipaa raattudhal
sutraththaar kaNNae uLa.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore