திருக்குறள் - 801     அதிகாரம்: 
| Adhikaram: pazhaimai

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

குறள் 801 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pazhaimai enappaduvadhu yaadhenin yaadhum" Thirukkural 801 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின் அது யாதொன்றிலும் உரிமையை அறுத்தலில்லாத நட்பு. இது பழையவன் செய்த உரிமையைச் சிறிதுஞ் சிதையாது உடன்படுதல் நட்பாவதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பழைமை எனப்படுவது யாது எனின் - பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு - அது பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு. ('கிழமை' ஆகுபெயர். 'கெழுதகைமை' என வருவனவும் அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின. சிதைத்தல் - விலக்கல். இதனான், 'பழைமையாவது காலம்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு' என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பழைமை யெனப்படுவது யாது எனின்-பழைமையென்று சொல்லப்படுவது என்னது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு-அது பழைமையான நண்பர் தாம்விரும்பியவாறு செய்தற்குரிய உரிமையைச் சிறிதும் கெடுக்காத பொறைநட்பாம். உரிமையால் விரும்பியவாறு செய்வன: கீழ்வினைஞரா யிருந்து கருமஞ் செய்யுங்காற் கேளாது செய்தல், கேடாகச் செய்யினும் மனம் வருந்தாமை, தமக்கு வேண்டியவற்றைத் தாமே யெடுத்துக்கொள்ளுதல், பணிவும் அச்சமுமின்மை, வீட்டிற்குள் வந்து தாராளமாகப் பழகுதல் முதலியன. இத்தகைய வரம்பு கடந்த நடத்தையைப் பொறுத்துக் கொள்வதே பழமை என்றவாறு. "ஒருவர் பொறையிருவர் நட்பு." (நாலடி. 223) என்றதும் இது பற்றியே. 'பழைமை' ஆகுபெயர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பழைமை எனப்படுவது என்னவென்றால் எதன் பொருட்டும் நாட்கள் மாறுவதைப் போல் மாற்றிக் கொள்ளாமல் தொடரும் நட்பு.

Thirukkural in English - English Couplet:


Familiarity is friendship's silent pact,
That puts restraint on no familiar act

ThirukKural English Meaning - Couplet -Translation:


Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).

ThiruKural Transliteration:


pazhaimai enappaduvadhu yaadhenin yaadhum
kizhamaiyaik keezhndhitaa natpu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore