திருக்குறள் - 839     அதிகாரம்: 
| Adhikaram: pedhaimai

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.

குறள் 839 - திருவள்ளுவர் - ThiruValluvar

"peridhinidhu paedhaiyaar kaenmai pirivin kan" Thirukkural 839 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது: பிரிந்தவிடத்துத் தருவதொரு துன்பம் இல்லையாதலான். இது பேதை காமந்துய்க்குமாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பேதையார் கேண்மை பெரிது இனிது-பேதை யானவரின் நட்பு மிக இனியதாம்; பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல்-எங்ஙனமெனின், அவரை விட்டுப் பிரியும்போது ஒரு துன்பமுந் தருவதில்லை. "பேயொடுங் கூடிப் பிரிதலோ வரிதே". "பரீ இ யுயிர்செகுக்கும் பாம்பொடு மின்னு மரீ இப் பின்னைப் பிரிவு." [நாலடி. 220] ஆதலால், பழகினவரை விட்டுப் பிரிதலென்பது பொதுவாகத் துன்பந் தருவதே, ஆயின், பேதையார்நட்பு வரவரத் தேய்ந்துவருதலாலும் யாதொரு நன்மையுஞ் செய்யாமையாலும், அவரை விட்டுப் பிரிதல் எள்ளளவுந் துன்பந் தராததாம். இதனால், அறிவுடையோர் நட்பாயின்அவர் பிரிவின்கண் பெரிதுந் துன்பம் தருமென்பது,எதிர்நிலை யளவையாற் பெறப்படும் . பேதையாரைப் புகழுவதுபோற் பழித்தலால், இது வஞ்சப் புகழ்ச்சி யென்னும் அணியாம் .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பெரியது இனிமையானது பேதைகளின் நட்பு காரணம் அவர்களின் பிரிவு துன்பம் ஒன்றும் தராது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஒருவகையில், பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும்; அதுதான், அவனைப் பிரிந்த விடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாததால்

Thirukkural in English - English Couplet:


Friendship of fools is very pleasant thing,
Parting with them will leave behind no sting.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.

ThiruKural Transliteration:


peridhinidhu paedhaiyaar kaeNmai pirivin-kaN
peezhai tharuvadhon Ril.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore