திருக்குறள் - 1102     அதிகாரம்: 
| Adhikaram: punarchchimakizhdhal

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

குறள் 1102 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pinikku marundhu piraman aniyizhai" Thirukkural 1102 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நோயுற்றால் அதற்கு மருந்தாவது பிறிதொன்று: இவ்வணியிழையால் வந்த நோய்க்குக் காரணமாகிய இவள் தானே மருந்தாம். இது புணர்வதன் முன்னின்ற வேட்கை தணிந்தமை கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இடந்தலைப் பாட்டின்கண் சொல்லியது) பிணிக்கு மருந்து பிற - வாதம் முதலிய பிணிகட்கு மருந்தாவன அவற்றிற்கு நிதானமாயினவன்றி மாறாய இயல்பினையுடையனவாம்; அணியிழை தன்நோய்க்கு மருந்து தானே - அவ்வாறன்றி இவ்வணியிழையினை உடையாள் தன்னினாய பிணிக்கு மருந்தும் தானேயாயினாள். (இயற்கைப் புணர்ச்சியை நினைந்து முன் வருந்தினான் ஆகலின் 'தன்நோய்' என்றும், அவ்வருத்தந் தமியாளை இடத்து எதிர்ப்பட்டுத், தீர்ந்தானாகலின் 'தானே மருந்து' என்றும் கூறினான். இப்பிணியும் எளியவாயவற்றால் தீரப்பெற்றிலம் என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக் கண் வந்தது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகன் இடந்தலைப் பாட்டின்கட் சொல்லியது) பிணிக்கு மருந்து மன் பிற - ஊதை (வாதம்) முதலிய நோய்கட்கு மருந்தாவன, பெரும்பாலும் அவற்றிற்கு மாறான இயல்புள்ள பிற பொருள்களாம்; அணியிழை தன் நோய்க்கு மருந்துதானே - ஆனால், இவ்வழகிய கலன்களை யணிந்தவளோ, தன்னாலுண்டான நோய்க்கு மருந்து தானே யாயினாள். இஃதொரு வியப்பே! சேடா என்னும் சலங்கைப்பூரான் கடித்தால், அதன் விளைவைத்தடுக்க, அப்பூரானையே கொன்று உலர்த்தித் தூளாக்கி வெற்றிலையில் மடித் துண்ணக்கொடுப்பர். இங்ஙனம் சில நோய்கட்கு நோயுண்டாக்கிய பொருள்களையே மருந்தாகக் கொடுப்பது வழக்கம். ஆதலால், 'மன்' பெரும்பான்மை குறித்த இடைச்சொல்லாகும். 'அணியிழை' அன்மொழித்தொகை ஏகாரம் பிரிநிலை. இடந்தலைப்பாடாவது, இயற்கைப் புணர்ச்சிக்கு மறுநாளும் தலைமகன் தானே சென்று முன்கூடிய இடத்தில் தலைமகளைக் கூடியது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிணிக்கு மருந்துகள் மாறுபட்டே இருக்கும் மெல்லியளாள் உண்டாக்கும் பிணிக்கு அவளே மருந்து.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நோய்க்கு மருந்தாக அமைவன வேறான பொருள்கள்; அவ்வாறு இல்லாமல், அணிபுனைந்த இவளால் நமக்கு வந்த நோய்க்கு, இவள், தானே மருந்தும் ஆயினளே!

Thirukkural in English - English Couplet:


Disease and medicine antagonists we surely see;
This maid, to pain she gives, herself is remedy.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.

ThiruKural Transliteration:


piNikku marundhu piRaman aNiyizhai
thannhoaikkuth thaanae marundhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore