திருக்குறள் - 733     அதிகாரம்: 
| Adhikaram: naatu

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.

குறள் 733 - திருவள்ளுவர் - ThiruValluvar

"poraiyorungu maelvarungaal thaangi iraivarku" Thirukkural 733 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


குடிமை செய்தால், ஒரு காலத்திலே பல குற்றம் தன்னிடத்துவரினும் அதனைப் பொறுத்து, நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு கொடுக்க வல்லது நாடு. குடிமையாவது கடமையொழிய வருவது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது. (பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத்தொகுதியும், தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல், அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிறநாடுகள் தாங்கிய மக்களும் கால்நடையுமாகிய பொறை யெல்லாம் தன்னிடத்து வந்து தங்கினும் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வதுநாடு - அதனால், தன் அரசனுக்கு செலுத்த வேண்டிய புரவுவரி சிறிதுங் குறையாது முன்போன்றே முழுதும் விரும்பிச் செலுத்துவதே (பண்பாட்டிற்கேற்ற) நல்ல நாடாவது. பிறநாட்டு மக்கள் கால் நடையுடன் வந்து குடிபுகுவதற்குக் கரணியம் , பஞ்சம், கொடுங்கோல், பகையரசு புகுதல் , வெள்ளம் முதலியவற்றுள் ஒன்றாம். ' தாங்குதல்' சொந்த நாடுபோல் உணவளித்துக் காத்தல். அது நில விரிவாலும் விளைவுப் பெருக்கத்தாலும் மக்கள் பண்பாட்டாலும் ஆட்சிச் செம்மையாலும் நேர்வதாம். குடிகள் வருவாய் குன்றாமையால் வரிகொடுப்பதுங் குன்றாதாயிற்று. நாட்டார் செயல் நாட்டின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சுமை பெருகி அதிகரிக்கும் தருணம் உதவி செய்வதால் ஆட்சியாளர்களுக்கு ஏற்றம் எற்படுவதே நாடு.

Thirukkural in English - English Couplet:


When burthens press, it bears; Yet, With unfailing hand
To king due tribute pays: that is the 'land' .

ThirukKural English Meaning - Couplet -Translation:


A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.

ThiruKural Transliteration:


poRaiyorungu maelvarungaal thaangi iRaivaRku
iRaiyorungu nervadhu naadu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore