திருக்குறள் - 753     அதிகாரம்: 
| Adhikaram: porulseyalvakai

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.

குறள் 753 - திருவள்ளுவர் - ThiruValluvar

"porulennum poiyaa vilakkam irularukkum" Thirukkural 753 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருளென்னும் மெய்யாகிய ஒளி எண்ணப்பட்ட தேசமெல்லாவற்றினுஞ் சென்று பகையென்னும் இருளை அறுக்கும். இது, பொருள் ஒளியில்லாதார்க்கும் ஒளியுண்டாக்கும்; அரசன் பொருளுடையனானால் தான் கருதிய தேசமெல்லாம் தன்னாணை நடத்துவானென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் என்னும் பொய்யா விளக்கம் - பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் - தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும். (எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றி. 'பொய்யா விளக்கம்' என்றும், ஏனைய விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்ற 'எண்ணிய தேயத்துச் சென்று' என்றும் கூறினார். ஏகதேச உருவகம். இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் என்னும் பொய்யா விளக்கம்-செல்வம் என்று எல்லாராலுஞ் சிறப்பித்துச் சொல்லப்பெறும் நந்தாவிளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும்-தன்னை உடையவர்க்கு அவர் கருதிய தேயத்துச் சென்று பகையென்னும் இருளைப் போக்கும். எக்காலத்தும் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாதலாலும் எல்லாரையும் விளங்கச் செய்தலாலும், 'பொய்யா விளக்கம்' என்னும்; ஏனை விளக்கொடு வேற்றுமை தோன்ற 'எண்ணிய தேயத்துச் சென்று' என்றும், பகையை விரைந்தழித்தல் பற்றி 'இருளறுக்கும்' என்றும், கூறினார். பகையென்னும் இருள் என்னாமையால் இது ஒருமருங் குருவகம். இம்மூன்று குறளாலும் செல்வத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் என்ற மாறுபாடு இல்லாத புரிதல் இருளை அகற்றும் எண்ணிய துறைகள் சென்று.

Thirukkural in English - English Couplet:


Wealth, the lamp unfailing, speeds to every land,
Dispersing darkness at its lord's command.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein).

ThiruKural Transliteration:


poruLennum poiyaa viLakkam iruLarukkum
eNNiya thaeyaththuch chendru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore