திருக்குறள் - 340     அதிகாரம்: 
| Adhikaram: nilaiyaamai

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

குறள் 340 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pukkil amaindhindru kolloa udampinul" Thirukkural 340 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு , புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்! (அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின்,பிறர் இல்களுள் துச்சிலிராது என்பதாம், ஆகவே உயிரோடுகூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவைஏழு பாட்டானும் , முறையே யாக்கைகட்கு வரைந்த நாள்கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவைஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும்என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக்கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறிவருமாறும் அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று,இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - பலவேறு நோய்கட்கும் பல்வகைப் புழுக்கட்கும் வாழிடமாகிய உடம்புகளுள் நெடுகலும் ஒண்டுக்குடியிருந்தே வந்த உயிருக்கு; புக்கில் அமைந் தின்று கொல்-நிலையாக வதியத்தக்க ஒர் உறையுள் இதுகாறும் அமையலில்லை போலும்! துஞ்சு+இல்=துச்சில்=ஒதுக்கிடம். புகு+இல்=புக்கில்=புகுந்து பின் நீங்காத நிலையான இருப்பிடம். புக்கில் அமைந்ததாயின் வெளியேறியிரா தென்பதாம். ஆகவே, உயிர் நிற்கக் கூடிய உடம்பு ஒன்று மில்லை யென்பது பெறப்பட்டது. இங்ஙனம் இவ்வதிகாரத்தில், அரிதாய்க் கிடைத்தும் நிலையாத செல்வத்தின் நிலையாமையும் குழவிப்பருவம் முதல் கிழப்பருவம் வரை எந்நொடியிலும் திடுமென இறக்கும் யாக்கையின் நிலையாமையும், இறந்த பின்பும் எல்லையில்லாது துன்பமாலை தொடரும் பிறப்பிறப்பின் நிலையாமையுங் கூறித் துறவதி காரத்திற்குத் தோற்றுவாய் செய்து வைத்தார் 'ஒ' அசைநிலை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


உடம்புகளுள் ஒதுக்கமாகவே இருந்து வந்த உயிர்க்கு, எப்போதும் நிலையாக இருப்பதோர் இல்லம் இதுவரை அமைந்ததில்லை போலும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


புகலிடம் அமையாமல் அலைகிறதோ உடம்பில் சிலகாலம் இருக்கும் உயிர்.

Thirukkural in English - English Couplet:


The soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home's conclusive rest it knows?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.

ThiruKural Transliteration:


pukkil amaindhindru kolloa udampinuL
thuchchil irundha uyirkku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore