திருக்குறள் - 183     அதிகாரம்: 
| Adhikaram: purangooraamai

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

குறள் 183 - திருவள்ளுவர் - ThiruValluvar

"purangoorip poiththuyir vaazhdhalin saadhal" Thirukkural 183 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும். (பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


புறங் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - ஒருவன் பிறனைக் காணாவிடத்துத் தீதாகக் கூறி அவனைக் கண்டவிடத்து நல்லவனாக நடித்து உயிர் வாழ்தலினும்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அங்ஙனஞ் செய்யாது இறந்து போதல் அவனுக்கு அற நூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும். இறந்தவழிப் புறங்கூறலின்மையால் ' அறங் கூறும் ஆக்கத்தரும்' என்றார். ஆக்கம் மறுமையிற் பெறும் நன்மை. ' அறம்' ஆகு பெயர். தரும் என்னும் சொல். "தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த". (512) என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி தன்மை முன்னிலையில் வராது படர்க்கையில் வந்ததினால், இடவழு வமைதியாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


புறம் பேசிப் பொய்ம்மையான வாழ்க்கையில் வாழ்வதைவிட அது செய்யாமல் இறந்துவிடுதல், அறநூல்களில் சொல்லப்படுகின்ற நற்பயனை அவனுக்குத் தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


புறம் பேசி பொய்யாக உயிர் வாழ்வதை விட மரணிப்பதே அறம் கூறும் நன்மையை தரும்.

Thirukkural in English - English Couplet:


'Tis greater gain of virtuous good for man to die,
Than live to slander absent friend, and falsely praise when nigh.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.

ThiruKural Transliteration:


puRangooRip poiththuyir vaazhdhalin saadhal
aRangootrum aakkath tharum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore