திருக்குறள் - 431     அதிகாரம்: 
| Adhikaram: kutrangatidhal

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

குறள் 431 - திருவள்ளுவர் - ThiruValluvar

"serukkunj sinamum sirumaiyum illaar" Thirukkural 431 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லாதார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையுடைத்து என்றவாறு. பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம், பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து. (மதம் : செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவறிந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான் , இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின் , மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - அகங்கரிப்பும் வெகுளியும் கழிகாமமுமாகிய குற்றங்களில்லாத அரசரின் செல்வம்; பெருமித நீர்த்து - மேம்பாட்டுத் தன்மையை யுடைத்து. செருக்கினாற் காவற்கடமை தவறுதலும் பெரியாரைப் பிழைத்தலும், சினத்தினால் ஐம்பெருங்குழுவும் உறுதிச்சுற்றமும் போன்றவற்றின் அன்பை இழத்தலும், சிறுமையினால் பழியும் உயிர்ச்சேதமும், நேருமாதலின், அக்குற்றங்களில்லாத அரசரின் செல்வம் வீறுபெற்றுதென்றார். சிறியோர் இயல்பு என்னுங் கருத்தால் அளவிறந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


செருக்கும் (மதமும்), கோபமும், காமமும், ஆகிய குற்றங்கள் இல்லாதவருடைய செல்வம் மேம்பாடான தன்மையினை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நான் என்ற ஆணவத்தால் வரும் செருக்கும், ஒத்திசைவு கொள்ளாத சினமும், தாழ்வு மனம் கொண்ட சிறுமையும் இல்லாதவர்களின் வளர்ச்சி அகங்காரம் என்ற பெருமிதம் நீர்த்ததாய் இருக்கும்.

Thirukkural in English - English Couplet:


Who arrogance, and wrath, and littleness of low desire restrain,
To sure increase of lofty dignity attain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

ThiruKural Transliteration:


serukkunj sinamum siRumaiyum illaar
perukkam perumidha neerththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore