திருக்குறள் - 569     அதிகாரம்: 
| Adhikaram: veruvandhaseyyaamai

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.

குறள் 569 - திருவள்ளுவர் - ThiruValluvar

"seruvandha poazhdhir siraiseyyaa vaendhan" Thirukkural 569 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந்தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிதுகெடும். இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறை செய்யா வேந்தன் - செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர் அரண்செய்து கொள்ளாத அரசன் செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் - அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதின் கெடும். (பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின், தனியனாய்த் தானும் வெருவி அப் பகைவயத்தனாம் என்பதாம். இதனால் தான் அஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறை செய்யா வேந்தன் -போர் வருவதற்கு முன்பே தனக்குப் புகலாக ஓர் அரண் செய்து கொள்ளாத அரசன் ; செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் -போர் வந்த போது தனக்குப் பாதுகாப்பின்மையால் அஞ்சி விரைந்து கெடுவான். படைமறவர் அஞ்சித் தன்னை விட்டு நீங்குதலாற் பகைவராற் பிடிக்கப்பட்டு, நாடோ செல்வமோ , உயிரோ அம் மூன்றுமோ இழக்க நேருமாதலின் , 'வெருவந்து வெய்து கெடும்' என்றார். 'வெய்து' என்பது கடுந்துன்புற்று என்றுமாம்.இதனால் அரசன் தானே அஞ்சும் வினையும் அதன் தீங்கும் கூறப்பட்டன.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவர் வருவதற்கு முன்பாகவே தனக்குப் புகலிடமானதோர் அரண் செய்து கொள்ளாத அரசன் போர்வந்த காலத்தில், பாதுகாப்பு இல்லாததால் விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


போர் மூண்ட காலத்தில் அடக்கி ஆள ஆடசியாளர் வெருப்படைந்து சீர் கெடுவர்.

Thirukkural in English - English Couplet:


Who builds no fort whence he may foe defy,
In time of war shall fear and swiftly die.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.

ThiruKural Transliteration:


seruvandha poazhdhir siRaiseyyaa vaendhan
veruvandhu veydhu kedum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore