திருக்குறள் - 307     அதிகாரம்: 
| Adhikaram: vekulaamai

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

குறள் 307 - திருவள்ளுவர் - ThiruValluvar

"sinaththaip porulendru kontavan kaedu" Thirukkural 307 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும், இது பொருட்கேடு வருமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது. (வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றாற்போல, ஈண்டுக்குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு- சினத்தைத்தன் ஆற்றலுணர்த்தும் சிறந்த பண்பென்று பொருட்படுத்தி அதைக்கொண்டவன் கெடுதல். நிலத்து அறைந்தான் கை பிழையாத அற்று- நிலத்தின் கண் அறைந்தவன் கை தப்பாது நோவுதல் போன்றதாம். இங்குப் பொருள் என்றதைப் "பொருளல்லவரை பொருளாகச் செய்யும்" (751) என்பதிற் போலக் கொள்க.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


நிலத்தினை அறைந்தவனுடைய கையானது அந்த நிலத்தினையடைதல் தப்பாதவாறு போல, சினத்தையே தனக்குக் குணமாகக் கொண்டிருப்பவன் கெடுவது உறுதி.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சினத்தை சிறந்ததாக எண்ணி போற்றுபவர் அடையும் கெடுதல் பூமியை கையால் அடித்து வலியால் துடிப்பதைப் போன்றது.

Thirukkural in English - English Couplet:


The hand that smites the earth unfailing feels the sting;
So perish they who nurse their wrath as noble thing.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.

ThiruKural Transliteration:


sinaththaip porulendru koNtavan kaedu
nilaththaRaindhaan kaipizhaiyaa thatru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore