திருக்குறள் - 1231     அதிகாரம்: 
| Adhikaram: uruppunalanazhidhal

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

குறள் 1231 - திருவள்ளுவர் - ThiruValluvar

"sirumai namakkozhiyach chaetchendraar ulli" Thirukkural 1231 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்துக் கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன. பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றாவா றாயிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது , தலைமகள்தன் கண்ணும் , தோளும் , நுதலும் முதலாய அவயவங்கள் தம் அழகு அழிதல் . இஃது இரக்கம் மிக்குழி நிகழ்வதாகலின் , பொழுது கண்டு இரங்கலின் பின் வைக்கப்பட்டது.] (ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன. (நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப்பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்', என்பது கருத்து.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(ஆற்றாமை மிகுதியால் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) சிறுமை நமக்கு ஒழியச் சேண்சென்றார் உள்ளி- இவ்வாற்றாமை நம்மிடத்து நிற்கத் தாம் தொலைவிற்குச் சென்ற காதலரை நினைத்து நீ யழுதலால்; கண் நறுமலர் நாணின- உன் கண்கள் ஒளியும் அழகும் இழந்து, முன் தமக்கு நாணிய நன்மண மலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன. இவை கண்டார் காதலரைக் கொடுமை கூறுவர். ஆதலால் நீ யாற்றல்வேண்டு மென்பது கருத்து. நீ யுள்ளிக் கண் நாணின என்பது தனிநிலைமுடிபாம் (absolute construction.)

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறுமை நமக்கு ஒழிய வேண்டும் என்று தூரம் சென்றவரை எண்ணி நறுமலரைக் கண்டு நாணின கண்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்றுவிட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள், தம் அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின.

Thirukkural in English - English Couplet:


Thine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see,
Thinking on him, who wand'ring far, leaves us in misery.

ThirukKural English Meaning - Couplet -Translation:


While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.

ThiruKural Transliteration:


sirumai namakkozhiyach chaetchendraar ulli
narumalar naanina kan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore