திருக்குறள் - 508     அதிகாரம்: 
| Adhikaram: therindhudhelidhal

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

குறள் 508 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thaeraan piranaith thelindhaan vazhimurai" Thirukkural 508 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும். இது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு, வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். (இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக்கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னொடு தொடர்பற்ற ஒருவனை ஒருவழியாலும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு ; வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு அவன் வழியினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். தொடர்பு தன் குடியோடியைந்த உறவு . தெளிதல் வினைத்தலைவனாக்குதல் . அவன் வினைக்கேட்டால் அரசனும் அவன் வழியினரும் அழிவர் என்பதாம் . நான்காம் வேற்றுமையுருபும் எச்சவும்மையும் தொக்கன , தேரான்-எதிர்மறை முற்றெச்சம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னளவில் தேர்ச்சிப் பெறாமல் அடுத்தவர் தேர்ச்சிப் பெற வழிகள் செய்தால் மாறாத துன்பம் ஏற்படும்.

Thirukkural in English - English Couplet:


Who trusts an untried stranger, brings disgrace,
Remediless, on all his race.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.

ThiruKural Transliteration:


thaeraan piRanaith theLindhaan vazhimuRai
theeraa idumpai tharum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore