திருக்குறள் - 1319     அதிகாரம்: 
| Adhikaram: pulavi nunukkam

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

குறள் 1319 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thannai unarththinum kaayum pirarkkum neer" Thirukkural 1319 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும், பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி வெகுளும். இது தன்னைப் போற்றினும் குற்றமென்று கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) தன்னை உணர்த்தினும் காயும் - இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று - பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர், என்று சொல்லி. ('இவள் தெளிவித்தவழியும் தெளியாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அது தானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது'? என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) தன்னை உணர்த்தினும் - இவ்வகையிற் கரணகமின்றி யூடிய தன்னை யான் பணிந்துரைத்து ஊடல் தீர்க்குங்காலும், பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று காயும் - பிறமகளிர்க்கும் நீர் அவரூடியவிடத்து இவ்வாறே பணிந்துணர்த்துந் தன்மையையுடையீராகுதிர் என்று சினங்கொள்வாள். இவள் நான் தெளிவித்த விடத்துந் தெளியாமை பற்றி, வேறு வழியில்லாது, என்மேல் இட்டேற்றிய பொய்யான தவற்றையும் உடம்பட்டுப் பணிந்தேன். ஆனால், நான் எதிர்பாராவண்ணம் அதுவும் புலத்தற் கேதுவாய் முடிந்தது. இனி இவள்பாற் செய்யத் தக்க தென்னவென்று தெரியாது மயங்கித் தியங்குகின்றேன் என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ? என்று சினந்தெழுவாள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பாராட்டி தான்படும் இன்னலை உணர்த்தினாலும் வறுந்தும், பிறரையும் இப்படித்தான் சமாதானம் செய்கிறீர் என்று.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அவள் ஊடிப் பிணங்கிய போது அதைத் தெளிவித்து இன்புறுத்தினாலும், ‘நீர் பிறமகளிர்க்கும் இத்தன்மையரே ஆவீர்’ என்று, என்மேற் சினம் கொள்வாள்.

Thirukkural in English - English Couplet:


I then began to soothe and coax, To calm her jealous mind;
'I see', quoth she, 'to other folks How you are wondrous kind' .

ThirukKural English Meaning - Couplet -Translation:


Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave towards (other women)."

ThiruKural Transliteration:


thannai unarththinum kaayum pirarkkum-neer
inneerar aakudhir endru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore