திருக்குறள் - 364     அதிகாரம்: 
| Adhikaram: avaavaruththal

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

குறள் 364 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thoouymai enpadhu avaavinmai matradhu" Thirukkural 364 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தூஉய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை,அது வாஅய்மை வேண்ட வரும் - அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம். (வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின்,அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை' என்பது அவா இன்மை என்றும் மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையது போல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல் - இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரும் வழியும் இதனால் கூறப்பட்டன.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தூய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்குத் தூயநிலைமையாகிய வீடென்று சொல்லப்படுவது அவாவில்லாமையாம்; அது வாய்மை வேண்ட வரும் - அவ்வவா வில்லாமை மெய்யான பரம்பொருளை வேண்டத்தானே வரும். அறியாமையும் அவாவும் முதலிய மாசுமறுவற்றதினால் வீட்டைத்தூய்மையென்றும் , கருமகத்தைக் கரணகமாக்கித் 'தூய்மையென்பது அவாவின்மை ' யென்றும், என்று முள்ள ஒரே மெய்ப் பொருள் பரம்பொருளாதலின் அதை வாய்மையென்றும், பரம்பொருளாற்பெறப்படும் சிறந்த பேரின்பத்தை நோக்கின் இழிந்த பிறவித்துன்பத்திற்கேதுவாகிய ஆசை நீங்குமாதலின் 'வாய்மைவேண்டவரும்' என்றுங் கூறினார். 'வாய்மை' ஆகுபெயர். 'மற்று' வினைமாற்றிடைச்சொல். 'தூஉய்மை,' 'வாஅய்மை' இரண்டும் இசைநிறையளபெடை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவருக்குப் பேரின்ப வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமையே ஆகும். அது மெய்ம்மையை விரும்ப, தானே உண்டாவதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தூய்மை என்பது ஆசை இல்லாது இருத்தல் மற்றவை வாய்மையை விரும்புவதால் வரும்.

Thirukkural in English - English Couplet:


Desire's decease as purity men know;
That, too, from yearning search for truth will grow.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.

ThiruKural Transliteration:


thoouymai enpadhu avaavinmai matradhu
vaaimai vaeNta varum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore