திருக்குறள் - 1279     அதிகாரம்: 
| Adhikaram: kuripparivuruththal

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

குறள் 1279 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thotinoakki mendhoalum noakki atinoakki" Thirukkural 1279 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது. அது - உடன்போக்கு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது. (செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275)என்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற் கறிவித்து.) ( யானது தெளிவித்த வழித் தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிந்து செல்ல நான் இங்கிருப்பின் இவை நில்லா வென்னுங் குறிப்பில்தன் தோட்கடகங்களை நோக்கி ; மெல் தோளும் நோக்கி - அதற் கேதுவாக இவை மெலியு மென்னுங் குறிப்பில் தன் மெல்லிய தோள்களையும் நோக்கி ; அடி நோக்கி - அதன் பின் , இவ்விரண்டும் நிகழாமல் நீங்கள் காதலருடன் நடந்து சென்று காத்தல் வேண்டு மென்னுங் குறிப்பில் தன் பாதங்களையும் நோக்கி ; அஃது ஆண்டு அவள் செய்தது-இங்ஙனம் உடன்போக்குக் குறித்த அச்செயலையே அன்று அவள் செய்தாள் . பிரிவுக் குறிப் புண்டாயின் செலவழுங்குவித்தல் இதன் பயனாம் .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வளையல்களை பார்த்து தனது மெல்லிய தோளையும் பார்த்து கிழ் நோக்கி பாதங்களையும் பார்த்து என்னை ஆள்பவள் குறிப்பு செய்து உணர்த்தினாள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தன் தோள்வளைகளை நோக்கி, மென்மையான தோள்களையும் நோக்கி, தன் அடிகளையும் நோக்கி, அவள் செய்த குறிப்பு உடன்போக்கு என்பதே ஆகும்.

Thirukkural in English - English Couplet:


She viewed her tender arms, she viewed the armlets from them slid;
She viewed her feet: all this the lady did.

ThirukKural English Meaning - Couplet -Translation:


She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).

ThiruKural Transliteration:


thotinoakki mendhoalum noakki atinoakki
aqdhaan davalsey thadhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore