திருக்குறள் - 1281     அதிகாரம்: 
| Adhikaram: punarchchividhumpal

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

குறள் 1281 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ullak kaliththalum kaana makizhdhalum" Thirukkural 1281 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலரை நினைத்த அளவிலே களிப்புப் பெறுதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை: காமத்திற்கு உண்டு. கள்ளிற்கு உண்ணக்களித்தலும் மகிழ்தலுமுண்டு: காமத்திற்கு உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமுண்டு என்றவாறு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது , தலைமகனும் தலைமகளும் புணர்ச்சிக்கண்ணே விரைதல் . மேற் புணர்ச்சி மிகுதிபற்றித் தலைமகன் பிரிதற் குறிப்பு அறிவுறுத்தத் தலைமகள் , அவன் மாட்டே நிகழாது வேட்கை மிகவினாற் பின்னும் தன்கண்ணே நிகழ்தலான் . இது குறிப்பு அறிவுறுத்தலின் பின் வைக்கப்பட்டது.] (பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் - நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு. (களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல்' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(பிரிதற் குறிப்பினனாகிய தலைமகனோடு நீ புலவாமைக்குக் காரணம் யாதென நகையாடிய தோழிக்குச் சொல்லியது .) உள்ளக் களித்தலும்-நினைத்தவளவிலேயே உள்ளங் கிளர்தலும் ; காண மகிழ்தலும்-கண்ட வளவிலேயே இன்புறுதலும் ; காமத்திற்கு உண்டு கள்ளுக்கு இல்-காம நுகர்ச்சிக்குரிய காதலன்(அல்லது காதலி)பற்றி யுண்டாகும், கடிப்பிற்குரிய கள் பற்றி யுண்டாகா. ஆதலாற் காதலன் முன்பு புலப்ப தெங்ஙனம் என்பதாம் . களித்தல் கள்ளுண்டு மகிழ்ச்சியடைதல் ; மகிழ்தல் கள்ளுண்டு வெறித்து இன்புறுதல் . இவ்விரண்டும் உண்டாலன்றி யின்மையின் ' கள்ளுக்கில்' என்றாள் . ' உண்டு' என்பது முன்னுஞ் சென்றியைதலால் இறுதிவிளக்கு . இதை ஒர் அணியாகக் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நினைப்பதால் களிப்பூட்டுவதும் பார்ப்பதால் மகிழ்ச்சி தருவதும் மதுவிற்கு இல்லை காமத்திற்கு உண்டு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நினைத்த பொழுதிலே களிப்படைவதும், கண்டபொழுதிலே மகிழ்ச்சி அடைவதும் ஆகிய இரண்டு நிலையும், கள்ளுக்குக் கிடையாது; காமத்திற்கு உண்டு.

Thirukkural in English - English Couplet:


Gladness at the thought, rejoicing at the sight,
Not palm-tree wine, but love, yields such delight.

ThirukKural English Meaning - Couplet -Translation:


To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.

ThiruKural Transliteration:


ullak kaliththalum kaana makizhdhalum
kallukkil kaamaththir kundu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore