திருக்குறள் - 1090     அதிகாரம்: 
| Adhikaram: thakaiyananguruththal

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

குறள் 1090 - திருவள்ளுவர் - ThiruValluvar

"undaarkan alladhu adunharaak kaamampoal" Thirukkural 1090 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அடப்பட்ட நறவு, உண்டார்மாட்டல்லது காமம் போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று. இது தலைமகள் தலைமகனைக் கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகள் குறிப்பறிதல் உற்றான் சொல்லியது.) அடுநறா - அடப்படும் நறா; உண்டார்கண் அல்லது - தன்னை உண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது; காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று - காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்தல் உடைத்தன்று. (அடுநறா: வெளிப்படை. 'காமம்' என்றது ஈண்டு அது நுகர்தற்கு இடனாகியாரை. 'கண்டார்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. மகிழ் செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே எனினும், இவள் குறிப்பு ஆராய்ந்து அறியாமையின், 'யான் அதுபெற்றிலேன்' எனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க. 'அரிமயிர்த் திரள் முன்கை'(புறநா.11)என்னும் புறப்பாட்டிற் குறிப்புப் போல.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


[தலைமகள் குறிப்பறிதலுற்றான் சொல்லியது] அடுநறா- காய்ச்சப்படும் இனிய மது; உண்டார் கண் அல்லது- தன்னைப் பருகினவருக்கன்றி; காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று- காதலிக்கப்பட்ட பெண்போலத் தன்னைப் பார்த்தவருக்கும் மகிழ்ச்சி தருதலில்லை. அடுநறா, சுவையும் மணமும் மிக்கனவும் உடம்பிற்கு உரஞ்செய் வனவும் சிறிது மயக்கந்தருவனவுமாக, கூலங்களினின்றும் கனிகளினின்றும் காயச்சரக்குகள் சேர்த்துக் காய்ச்சி யிறக்கப்படும் மட்டு வகைகள். மகிழ் என்பது, களி என்னுஞ்சொற்போல இன்பத்தையும் மயக்கத்தையும் உணர்த்தும். காமம் என்றது இங்கு அதை நுகர்தற்கு இடமானவரை. அவர் ஆடவர்க்குப் பெண்டிரும் பெண்டிர்க்கு ஆடவருமாவர். கண்டார் கண் என்பதிற் கண்ணென்னும் இடப்பொருளுருபு தொக்கது. இவள் காதற் குறிப்பை இன்னும் அறியாமையால் கண்டாரின்பமே யன்றி உண்டாரின்பம் யான் பெற்றிலேன் என்பது குறிப்பெச்சம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உண்டவர் இடத்தில் அல்லது மயக்கம் தராது போதைப் பொருள்கள் காமம் போல் கண்டாலே மகிழச் செய்வது இல்லை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தன்னை உண்டவருக்கு மகிழ்ச்சியைச் செய்வதல்லாமல், அடப்பட்ட தவறானது, காமத்தைப் போலக் கண்டவருக்கு மகிழ்வைச் செய்யும் ஆற்றலுடையது இல்லையே!

Thirukkural in English - English Couplet:


The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine;
But love hath rare felicity For those that only see!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.

ThiruKural Transliteration:


undaarkaN alladhu adunhaRaak kaamampoal
kandaar makizhseydhal indru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore