திருக்குறள் - 1143     அதிகாரம்: 
| Adhikaram: alararivuruththal

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

குறள் 1143 - திருவள்ளுவர் - ThiruValluvar

"uraaadhoa oorarindha kelavai adhanaip" Thirukkural 1143 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊரறிந்த அலர் வருவதொன்றன்றோ? அவ்வலரைத் தீதாகக் கொள்ளாது, பெறாததொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத்தாகக் கொள்ளல் வேண்டும். இஃது அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமராவார் உடன்படுவரென்று தலைமகன் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) ஊர் அறிந்த கௌவை உறாஅதோ - எங்கட்குக் கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவதொன்றன்றோ; அதனைப் பெறாது பெற்றன்ன நீர்த்து - அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான். (பெற்றன்ன நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊர் அறிந்த கௌவை உறாதோ-யானும் என் காதலியுமாகிய எங்கட்குக் கூட்டமுண்மை இவ்வூரார் அறிதலால் விளைந்த அலர் எனக்கு ஏற்ற தொன்றன்றே !; அதனைப் பெறாது பெற்ற அன்ன நீர்த்து-அதைக் கேட்ட நான், அக் கூட்டத்தை இன்று பெறாதிருந்தும், பெற்றாற்போல இன்புறுதற் கேதுவான தன்மையை அவ்வலர் உடைத்தாகலான். கௌவை நீர்த்து என இசையும். பரிமேலழகர் போல் மனமென்னும் வினைமுதலை வருவிக்கத் தேவையில்லை. 'உறா அதோ' 'பெறா அது' இசைநிறையளபெடைகள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உடனே நடக்காதோ ஊர் அறிந்த பழிச்சொல் அதனை பெற்றிடாதோ பெற்றால் பழிச் சொல்லும் நிர்த்து விடும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஊர் அனைத்தும் அறிந்த இப் பழிச்சொற்கள் அவனையும் சென்று சேராதோ! சேருமாதலால், அதனைப் பெறாததைப் பெற்றாற் போன்றதாகவே யானும் கொள்வேன்.

Thirukkural in English - English Couplet:


The rumour spread within the town, is it not gain to me?
It is as though that were obtained that may not be.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).

ThiruKural Transliteration:


uRaaadhoa ooraRindha keLavai adhanaip
peRaaadhu petranna neerththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore