திருக்குறள் - 1106     அதிகாரம்: 
| Adhikaram: punarchchimakizhdhal

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

குறள் 1106 - திருவள்ளுவர் - ThiruValluvar

"urudhoaru uyirdhalirppath theendalaal paedhaikku" Thirukkural 1106 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால் பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும். சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால்- தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன. (ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று. வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் - நான் இவளைத் தழுவும் போதெல்லாம் என் உயிர் தழைக்குமாறு தீண்டுதலால்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இவ்விளம் பெண்ணிற்குத் தோள்கள் அமிழ்தினால் அமைக்கப் பெற்றனவாயிருக்கின்றன. மென்மையுந் தண்மையும் இன்பமும் பற்றி 'அமிழ்தி னியன்றன' என்றான். பேதை என்னுஞ் சொல் பருவங் குறியாது இளமை குறித்து நின்றது. 'தோள்' பால்பகாவஃறிணைப் பெயர். தழைத்தல் கிளர்ச்சியும் உரமும் பெறுதல்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒவ்வொரு பொழுதும் உயிர் வளர்க்கத் தீண்டுவதால் பேதைக்கு அமிழ்தைப் போன்ற இயல்புடைய தோள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால், இப் பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைந்தவை போலும்!

Thirukkural in English - English Couplet:


Ambrosia are the simple maiden's arms; when I attain
Their touch, my withered life puts forth its buds again!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.

ThiruKural Transliteration:


uRudhoaRu uyirdhaLirppath theeNdalaal paedhaikku
amizhdhin iyandrana thoaL.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore