திருக்குறள் - 1124     அதிகாரம்: 

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

குறள் 1124 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vaazhdhal uyirkkannal aayizhai saadhal" Thirukkural 1124 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள்: நீங்குமிடத்து அவ்வுயிர்க்குச் சாதலோடு ஒப்பள். இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்கானென்று கருதிய தலைமகள் கேட்பத் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது.) ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும், நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் - பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்; ('எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும் அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


( பகற்குறிக்கட் புணர்ந்து நீங்குவான் சொல்வியது. ) ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - ஆய்ந்தெடுத்த அணிகலன்களை யுடையாள் என்னோடு கூடுமிடத்து எனக்கு உயிருக்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும் ; நீங்கு மிடத்து அதற்குச் சாதல் அன்னள் - என்னை விட்டுப் பிரியுமிடத்து அதற்கு அதினின்று நீங்கிச் சாதல் போலும் . வாழ்தலின் இனியதும் சாதலின் இன்னாததும் இல்லையாதலின் , கூடுதல் வாழ்தலும் நீங்குதல் சாதலும் போல்வன என்றான் . கூடுமிடத்து என்பது எனக்கு என்பதும் அவாய்நிலையான் வந்தன , ' ஆயிழை ' அன்மொழித்தொகை .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வாழ்தலுக்கு உயிர் போன்று வளம் தருபவள் சாதல் அதற்கு காரணமாக நீங்கும் இடத்து இருக்கிறாள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


இந்த ஆயிழையாள் என்னுடன் இருக்கும் போது, என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள்; நீங்கும் போதோ அவ்வுயிருக்குச் சாதலையே தருகின்றாள்!

Thirukkural in English - English Couplet:


Life is she to my very soul when she draws nigh;
Dissevered from the maid with jewels rare, I die!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.

ThiruKural Transliteration:


Vaazhdhal Uyirkkannal Aayizhai Saadhal
Adharkannal Neengum Itaththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore