திருக்குறள் - 552     அதிகாரம்: 
| Adhikaram: kotungonmai

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

குறள் 552 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vaelotu nindraan iduven radhupoalum" Thirukkural 552 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென்றல்போலும்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல். கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத்தனியே வேல் கொண்டு நின்ற கள்வன், இடு என்றது போலும் - ஆறுசெல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடுஒக்கும், கோலொடு நின்றான் இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்றஅரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல். ('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம், தாராக்கால்ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின் இரவாற் கோடலும் கொடுங்கோன்மைஆயிற்று,இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையதுகுற்றம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கோலொடு நின்றான் இரவு - கொலைவரைத் தண்டிக்கும் அதிகாரத்தைத் தாங்கிய ஆட்சியொடு கூடிய அரசன் குடிகளிடம் பொருள் வேண்டுதல் ; வேலொடு நின்றான் இடு என்றது போலும் - கொல்லும் வேலை ஏந்திநின்ற வழிப்பறிக்கள்வன் வழிச்செல்வானை நோக்கி உன்கைப்பொருளைக் கீழே வை என்று சொல்வதனோ டொக்கும். அரசன் குடிகளிடம் அச்சுறுத்திக் கேளாவிடினும் ; குடிகள் கொடாவிடின் தப்பாது தண்டிக்கப்படுவர் . என்னும் குறிப்பிருத்தலால் , அவன் இரப்பதும் வழிப்பறிக்கள்வன் ஏவல் போன்றதே யென்றார் . 'வேலொடு நின்றான்' என்பதனால் வழிப்பறிக்கள்வன் தனியன் என்பதும் , 'இடு' என்னும் ஏவலொருமையால் வழிச்சொல்வோன் ஒன்றியென்பதும் , 'இரவு' என்றதனால் கொடுங்கோல் அரசன் இரப்பது குடிகள் முறைப்படி செலுத்தவேண்டிய புரவுவரியன்றென்பதும் பெறப்படும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தண்டிக்கும் தொழிலோடு நின்ற அரசன் குடிமக்களிடம் பொருள் வேண்டிக் கேட்டல், வேற்படைகளுடனே தனியே நின்ற கள்வன் வழிப்போக்கனை நோக்கிக் கைப்பொருளினைத் 'தா' என்பதனோடு ஒக்கும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கொலைக் கருவியைக் காட்டி கொடு என்பதைப் போன்றது ஆணைகள் கொண்டு மிரட்டும் ஆட்சியாளர்களின் கண்முடித்தனம்.

Thirukkural in English - English Couplet:


As 'Give' the robber cries with lance uplift,
So kings with sceptred hand implore a gift.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth".

ThiruKural Transliteration:


vaelotu nindraan iduven Radhupoalum
koalodu nindraan iravu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore