திருக்குறள் - 878     அதிகாரம்: 

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

குறள் 878 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vakaiyarindhu tharseydhu tharkaappa maayum" Thirukkural 878 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கித் தான் தன்னைக் காக்கப் பகைவர்மாட்டு உண்டான பெருமிதம் கெடும். இது பகைவரைக் கொல்லுந் திறங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வகை அறிந்து தற் செய்து தற் காப்ப - தான் வினை செய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கு ஏற்பத் தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - தன் பகைவர் மாட்டு உளதாய களிப்புக் கெடும். (வகை - வலியனாய்த் தான் எதிரே பொருமாறும், மெலியனாய் அளவில் போர் விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருகச் செய்தல். களிப்பு - 'இவற்றான் வேறும்' என்று எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே அடங்குவர் என்பதாம். இதனால் களைதற்பால தன்கண் செய்வன கூறப்பட்டன.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வகை அறிந்து தற்செய்து தற்காப்ப-வினை செய்யும் வகையறிந்து அதற்கேற்பத் தன்னை வலிமைப் படுத்தித் தற்காப்புஞ் செய்துகொள்ளின் ; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - பகைவரிடத்துள்ள இறுமாப்புத்தானே நீங்கிவிடும். வினைசெய்யும் வகைகள் நால்வகை ஆம்புடைகளும் , பிரித்தல் பொருத்தல் பேணல் முதலிய வலக்காரங்களும் , காலவிட வலி களறிந்து சூழ்தலும் , தும்பை யுழிஞை முதலிய போர்புரிதலும் முதலாயின. வலிமைப்படுத்தலாவது . பொருள் படைதுணைகளைப் பெருக்குதல் . தற்காத்தலாவது பல்வகையரணும் அமைத்துக் கொள்ளுதல் . இறுமாப்புத்தம்மை யெவரும் வெல்ல முடியா தென்றும் தாம்பிறரை எளிதாய் வெல்ல முடியுமென்றும் மகிழ்ந்திருத்தல் . இக்குறளாற் போர் செய்யாமலே பகைவரை விலக்கும் வகை கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு செ‌யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய ‌செருக்கு அழியும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எப்படி என்ற வகை அறிந்து, தகுதிகளை அறிந்து, தன்னை காக்க அறிந்தால், அழியும் பகைவருக்கு ஏற்பட்ட கர்வம்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தான் செய்யும் செயலின் வகையை அறிந்து, அது முடிவதற்கு ஏற்றபடி தன்னைப் பெருக்கிச் சோம்பல் புகாமல் காக்கவே, பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்துவிடும்.

Thirukkural in English - English Couplet:


Know thou the way, then do thy part, thyself defend;
Thus shall the pride of those that hate thee have an end.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.

ThiruKural Transliteration:


vakaiyaRindhu thaRseydhu thaRkaappa maayum
pakaivarkaN patta serukku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore