திருக்குறள் - 435     அதிகாரம்: 
| Adhikaram: kutrangatidhal

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

குறள் 435 - திருவள்ளுவர் - ThiruValluvar

"varumunnark kaavaadhaan vaazhkkai erimunnar" Thirukkural 435 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


துன்பம் வருவதன்முன், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய்யானது செல்வம் எரிமுன்னர்க்கிடந்த வைத்திரள் போலக் கெடும். இது முந்துற்றுக் காவல் செய்வன செய்யாமையும் குற்ற மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் வரக்கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை, எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் - அது வந்தால் எரிமுகத்து நின்ற வைக்குவை போல அழிந்து விடும். ('குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. முன்னர் என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி, 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனால் காக்கலாம் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும், அதனால் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையால் பெற்றாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் நேர்வதற்கு முன்பே அதையறிந்து தடுக்காத அரசனது வாழ்க்கை; எரி முன்னர் வைத்தூறுபோலக் கெடும் -அது நேர்ந்தவுடன் நெருப்பு முகத்து நின்ற வைக்கோற்போர்போல அழிந்து விடும். குற்றம்என்பது அதிகாரத்தால் வந்தது. முன் - முன்னம் -முன்னர். குற்றத்தை அது வருமுன் காக்கவேண்டு மென்பதும் குற்றஞ் சிறிதாயினும் அதனாற் பேரிழப்பு விரைந்து நேருமென்பதும், உவமையாற் பெறப்பட்டன.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


குற்றம் வருவதற்கு முன்பாகவே தன்னைக் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை அக்குற்றம் வந்தால் நெருப்பின் முன்னே இருக்கும் வைக்கோலினைப் போல அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


குற்றத்தால் துன்பம் வருமுன் தன்னை காத்துக் கொள்ள தவறியவரின் வாழ்க்கை தீயின் முன்னே வைத்த வைக்கோல் போலக் கெடும்.

Thirukkural in English - English Couplet:


His joy who guards not 'gainst the coming evil day,
Like straw before the fire shall swift consume away.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.

ThiruKural Transliteration:


varumunnark kaavaadhaan vaazhkkai erimunnar
vaiththooRu poalak kedum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore