திருக்குறள் - 1198     அதிகாரம்: 
| Adhikaram: thanippatarmikudhi

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

குறள் 1198 - திருவள்ளுவர் - ThiruValluvar

"veezhvaarin insol peraaadhu ulakaththu" Thirukkural 1198 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம் காதலரிடத்துநின்று வரும் இனியசொற்களைக் கேளாது உயிர்வாழ்வாரைப்போல வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகனிடத்தினின்று தூதுவராமைபற்றித் தலைமகள் வருந்தியது.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின்-தம்மால் விரும்பப்படும் காதலரிடத்து நின்றும் ஓரின் சொல்லளவும் வரப்பெறாதே பிரிவாற்றி உயிர்வாழ்கின்ற மகளிர்போல:வன்கணாளர் உலகத்து இல்-வன்னெஞ்சர் இவ்வுலகத்தில் வேறொருவருமில்லை. தொலைவிலுள்ள காதலரிடத்தினின்று வருந் தூதெல்லாம் இக்காலத் தஞ்சல் போலப் பொதுவாக இன்பம் பயக்குமாதலின் ’இன்சொல்’ என்றும், பிரிவாற்றுதலோடு தூதின்மை யாற்றுதலுஞ் செய்தலால் ’வாழ்வாரின் வன்கணாரில்’ என்றுங் கூறினாள். ’பெறாஅ’ இசைநிறையளபெடை.. இழிவு சிறப்பும்மை தொக்கது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலில் வீழ்ந்தவர் இடத்தில் இருந்து இனிமையான சொல் பெறாமல் உலகத்தில் வாழ்பவரை விட வன்மையானவர் இல்லை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தாம் விரும்பிய காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களை விட வன்கண்மை உடையவர்கள், யாரும் இல்லை.

Thirukkural in English - English Couplet:


Who hear from lover's lips no pleasant word from day to day,
Yet in the world live out their life,- no braver souls than they!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.

ThiruKural Transliteration:


veezhvaarin insol peraaadhu ulakaththu
vaazhvaarin van-kanaar il.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore