திருக்குறள் - 143     அதிகாரம்: 
| Adhikaram: piranil vizhaiyaamai

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.

குறள் 143 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vilindhaarin vaerallar mandra thelindhaaril" Thirukkural 143 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாகச் செத்தாரின் வேறல்லர். இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார், விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர். (அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்', என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை நல்லவரென்று நம்பித் தாராளமாய்ப் பழகவிட்டவரின் மனைவியின் கண் தீவினை செய்தலை விரும்பியொழுகுவார் ; மன்ற - உறுதியாக ; விளிந்தாரின் வேறு அல்லர் - இறந்தாரின் வேறுபட்டவரல்லர் . உயிர் அடையவேண்டிய அறம்பொருளின்பங்களை அடையாமை பற்றியும் , தீமை செய்யாரென்று நம்பிப் பழகவிட்ட நிலைமையையே தீமை செய்தற்குப் பயன்படுத்தியது பற்றியும் , உயிருடையவரேனும் செத்தவரே என்றார் .'மன்ற' தேற்றப் பொருளிடைச் சொல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மைச் சிறிதும் சந்தேகிக்காதவருடைய இல்லாளிடத்திலும் தீமை செய்து நடப்பவர்கள் உயிருடையவர்களானாலும் இறந்தவர்களே ஆவார்கள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஏசப்படவேண்டியவர் வேறு ஒருவர் இல்லை நன்கு அறிந்தவருக்கு தீமை செய்து பழுகுபவரைத் தவிர.

Thirukkural in English - English Couplet:


They're numbered with the dead, e'en while they live, -how otherwise?
With wife of sure confiding friend who evil things devise.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.

ThiruKural Transliteration:


viLindhaarin vaeRallar mandra theLindhaaril
theemai purindhozhuku vaar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore