திருக்குறள் - 674     அதிகாரம்: 
| Adhikaram: vinaiseyalvakai

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

குறள் 674 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vinaipakai endrirantin echcham ninaiyungaal" Thirukkural 674 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வினையும் பகைமையு மென்னும் இரண்டினது ஒழிபு விசாரிக்குங்காலத்துத் தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும். எச்சம்- சேஷம். இது வினைசெய்யுங்கால் சிறிதொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வினை பகை என்ற இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் - ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப்பின் வளர்ந்து கெடுக்கும். (இனி,இக்குறை என் செய்வது? என்று இகழ்ந்தொழியற்க, முடியச் செய்க என்பதாம், பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந் திறம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நினையுங்கால்-ஆராய்ந்து பார்க்குமிடத்து; வினை பகை என்ற இரண்டின் எச்சம்-செய்யத் தொடங்கிய வினை, ஒழிக்கத் தொடங்கிய பகை ஆகிய இரண்டிலும் விட்டு வைத்த குறை; தீ எச்சம் போலத் தெறும்-அவிக்காது விட்டு வைத்த தீயின் குறை போலப் பின் வளர்ந்து தம்மை விட்டுவைத்தவரை அழித்து விடும். பல பெரும் பகைவரை அடக்கியதொடு பொத்திகை(திருப்தி)யடைந்து ஒரு சிறு பகைவனை விட்டுவைப்பது பகை யெச்சமாம். பகையொடு சேர்த்துக் கூறியதாலும், 'தீயெச்சம் போலத்தெறும்' என்றதனாலும், வினை யென்றது கேட்டை நீக்கும் வினையை என்பது அறியப்படும். வெள்ளக் காலத்திற் பெருங் குளக்கரை யுடைப்பையெல்லாம் அடைத்தவர் ஒரு சிறு கசிவை விட்டுவைப்பதும், கொடிய நோய்க்கு மருத்துவம் செய்து கொள்பவன் ஒரு சிறு பகுதியைப் புறக்கணிப்பதும், வினையின் எச்சத்திற்கு எடுத்துக் காட்டாம். இனி இக்குறை என்ன செய்யும் என்றிகழாது முடியச் செய்க என்பதாம். இது வலியனுக்குரிய வினை. இனி, வினையெச்சம் என்பது தோற்றோடிய பகைவனைத் தொடராது விட்டுவிடும் போர்வினையெச்சம் எனலுமாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யத் தொடங்கிய தொழில், ஒழிக்க வேண்டிய பகை ஆகிய இரண்டிலும் எச்சமாக (மீதியாக) வைத்தால், அவை மிச்சமாக விட்டுவிட்ட தீயானது வளர்ந்து விடுவதுபோல வளர்ந்து கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


செயல், எதிர்ப்பு என்ற இரண்டின் முடிவற்றதன்மையை ஆராய்ந்தால் தீயின் முடிவு போல் தொடரும். (எனவே முழுமையாக முடிக்க வேண்டும்)

Thirukkural in English - English Couplet:


With work or foe, when you neglect some little thing,
If you reflect, like smouldering fire, 'twill ruin bring.

ThirukKural English Meaning - Couplet -Translation:


When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.

ThiruKural Transliteration:


vinaipakai endriraNtin echcham ninaiyungaal
theeyechcham poalath thaeRum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore