திருக்குறள் - 522     அதிகாரம்: 
| Adhikaram: sutrandhazhaal

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.

குறள் 522 - திருவள்ளுவர் - ThiruValluvar

"virupparaach sutram iyaiyin arupparaa" Thirukkural 522 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பறாத சுற்றம் ஓரிடத்தே பொருந்தி யொழுகு மாயின், அது கிளைத்தலறாத ஆக்கமாகிய பலவற்றையுந் தரும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும். (உட்பகையின் நீக்குதற்கு 'விருப்புஅறாச் சுற்றம' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு அருப்பு அறா ஆக்கம் என்றும், விசேடித்தார். தொடை நோக்கி விகார மாயிற்று. 'இயையின' என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர். பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேல் கிளைக்கும் என்பது கருத்து.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு நீங்காத உறவினம் ஒருவனுக்கு வாய்க்குமாயின் ; அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அது அவனுக்கு மேன்மேலுங் கிளரும் பல்வகைச் செல்வத்தை உண்டாக்கும். அன்பார்ந்த உறவினர் பல்வகைச் செல்வத்தையுங் காத்து வளர்ப்பராதலின் , 'ஆக்கம் பலவுந் தரும்' என்றார் . 'உற்றோரெல்லாம் உறவின ரல்லர்' . ஆதலின் , 'விருப்பறாச் சுற்றம்' என்றும் , மேன்மேற் கிளைத்து வளருஞ் செல்வத்தை 'அருப்பறா வாக்கம்' என்றும் கூறினார் . 'இயையின்' என்பது இயைதலின் அருமை குறித்து நின்றது . அரும்புதல் - தோன்றுதல் . விரும்பு - விருப்பு . அரும்பு - அருப்பு. ஆக்கம் தொழிலாகுபெயர்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்கு உண்டாகி விடுமானால், அது அவருக்குக் கிளைத்தல் நீங்காத பல செயல்களையும் தரும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


விருப்பம் நீங்க சுற்றம் அமைந்தால் அழிவற்ற ஆக்கம் பல உண்டாகும்.

Thirukkural in English - English Couplet:


The gift of kin's unfailing love bestows
Much gain of good, like flower that fadeless blows.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of ever-increasing wealth.

ThiruKural Transliteration:


viruppaRaach sutram iyaiyin aruppaRaa
aakkam palavum tharum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore