திருக்குறள் - 16     அதிகாரம்: 
| Adhikaram: vaansirappu

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

குறள் 16 - திருவள்ளுவர் - ThiruValluvar

"visumpin thuliveezhin allaalmar raange" Thirukkural 16 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. ('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


விசும்பின் துளிவீழின் அல்லால் - வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றி; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது - பின் அப்பொழுதே பசும்புல் நுனியையும் காண்பது அரிதாகும். 'மற்று' விளைவு குறித்த பின்மைப் பொருளிடைச்சொல். ஆங்கே என்றது தேற்றமும் விரைவும் பற்றிய காலவழுவமைதி. புற்றலை என்பது புன்னிலம் என்றுமாம். ஒரு நாட்குள் முளைக்கும் புல்லும் இல்லையெனின், மற்ற மரஞ்செடி கொடிகளின் இன்மையைச் சொல்லவேண்டுவதில்லை. ஓரறிவுயிர் இல்லையெனின் மற்ற ஐவகையுயிர்களும் நாளடைவில் இராவென்பதாம். இழிவு சிறப்பும்மை செய்யுளால் தொக்கது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மேகத்திலிருந்து மழைத்துளிகள் வீழாவிட்டால் பசும்புல்லினது தலையையும் காணுதல் அரிதாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறு துளியாக மழை இல்லாமல் போனால் புல்லும் முளைக்காமல் போகும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


வானிலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகில், பசும்புல்லின் தலையைக் காண்பதுங் கூட அருமையாகி விடும்.

Thirukkural in English - English Couplet:


If from the clouds no drops of rain are shed
'Tis rare to see green herb lift up its head.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.

ThiruKural Transliteration:


visumpin thuLiveezhin allaalmaR Raange
pasumpul thalaikaaN paridhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore